பல் மருத்துவ கல்லூரி விவகாரம்: பங்காரு அடிகளார் மனைவி, மகன்களுக்கு முன் ஜாமீன்
சென்னை: பல் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு தொடங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய நிறுவனர் பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார்.
2012-ம் ஆண்டு எம்டிஎஸ் எனப்படும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழகத்திடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பத்திருக்கிறது. அக்டோபர் 2012-ல் நடந்த ஆய்வில் கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டி அனுமதி மறுத்திருக்கிறது இந்திய பல் மருத்துவக் கழகம்.
டிசம்பர் 28-ம் தேதி கூடிய கல்லூரியின் நிர்வாகக் குழு இந்திய பல் மருத்துவக் கழகத்தின் உறுப்பினர் ராயப்பேட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் எஸ் முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முடிவு செய்திருக்கிறது. இந்த முருகேசன் எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருக்கிறார்.
ஆதிபராசக்தி கல்லூரியினர் முருகேசனுக்கு லஞ்சம் கொடுக்கப் போவது பற்றிய தகவல் சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரிய வந்து ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் இருக்கும் அவரது கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். லஞ்சப் பணத்தின் முதல் தவணையாக ரூ 25 லட்சத்தை கொடுத்த போது, முருகேசனையும், கல்லூரியின் நிர்வாகச் செயலர் கருணாநிதி, நிர்வாக அலுவலர் கே ராம்பத்ரன் ஆகியோரையும் இடைத்தரகராக உடன் வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஆரணி எம்எல்ஏ டி பழனியையும் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி 8-ம் தேதி கைது செய்தனர்.
இந்த லஞ்ச விவகாரத்தில் பல் மருத்துவக்கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரியான லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன்கள் செந்தில், அன்பழகன் ஆகியோருக்கு சி.பிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரி 19ம் தேதி சம்மன் அனுப்பியது. கைதாவதை தடுக்க லட்சுமி உள்ளிட்ட மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர். சுப்பையா, மனுதாரர்கள் 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். மனுதாரர்கள் 3 பேரும் சம்பந்தப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் மார்ச் 15-ம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications