மார்ச் 31 முதல் சென்னை – பெங்களூர் டபுள் டக்கர் ரயில் இயக்கம்?
சென்னை: சென்னை - பெங்களூர் இடையே டபுள்டக்கர் மாடி ரயில் மார்ச் 31 முதல் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இரண்டு முறை சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளதை அடுத்து ரயில்வே அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
டபுள்டக்கர் சொகுசு ரெயில் வேகம் மற்ற ரெயில்களை விட அதிகமாகும். இந்த ரெயில் சோதனை ஓட்டமாக பெங்களூருக்கு இயக்கப்பட்டது. முதல் முறை நடந்த சோதனை ஓட்டத்தில் சில குறைபாடுகள் தெரிய வந்தன.
இதையடுத்து அவற்றை நிவர்த்தி செய்து 2-வது முறையாக பெங்களூருக்கு இன்று மீண்டும் இயக்கப்பட்டது. அந்த ரெயில் இன்று சென்ட்ரல் நிலையத்திற்கு வந்தது. 2 கட்ட சோதனையின் போதும் பல்வேறு குறைகள் சரி செய்யப்பட வேண்டும் என்று தொழில்நுட்ப துறையினர் எடுத்து கூறினர்.

மாடி ரெயில் இயக்கப்படு வதற்கான தகுதி உறுதிச் சான்றினை அதிகாரி வழங்கிய பிறகு அந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். இன்னும் 2 வாரத்தில் இதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குளு குளு வசதி மாடி ரயில்
டபுள் டக்கர் ரயிலில் கீழ் பகுதியாகவும், மாடிப் பகுதியாகவும் பிரித்து இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முற்றிலும் உட்கார்ந்து செல்லக்கூடிய (சேர்கார்) வகையில் இந்த பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 120 பயணிகள் பயணம் செய்யும் வசதி உள்ளது. இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளும் குளு குளு வசதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற சேர்காரில் 72 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். இந்த ரெயிலில் 11 பெட்டிகள் மூலம் மொத்தம் 1320 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம். பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications