காந்தியவாதி சசி பெருமாளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ
சென்னை: தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் மனசாட்சியாக உள்ள சசிபெருமாளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காந்தியவாதி சசி பெருமாள் கடந்த ஜனவரி 30ம் தேதி முதல் சென்னை கடற்கரை காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து காந்தி சிலை அருகே அவர் மேலும் உண்ணாவிரதத்தை தொடரவே அவரை மீண்டும் கைது செய்த போலீசார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 31 வது நாளாக உண்ணாவிரதம் தொடர்வதால் சசிபெருமாளின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
அவரை ஏராளமான அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காந்தியவாதி சசி பெருமாளின் உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக் கிடமாகி வருவதாக வைகோ குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் மனசாட்சியாக உள்ள சசிபெருமாளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பூரணமதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சசிபெருமாளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications