காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன்: 10ம் வகுப்பு மாணவியை மிரட்டிய வாலிபர் கைது
நெல்லை: நெல்லை அருகே காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசிக் கொன்று விடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பாப்பாக்குடி அருகே உள்ள புதுகிராமத்தைச் சேர்ந்த சிவனு பாண்டி மகன் சுவாமிநாதன். இவரும் மாணவியும் உறவினர்கள் ஆவர். சுவாமிநாதன் சித்ராவை ஒரு தலையாக காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களாக மாணவி பின்னால் தினமும் சுற்றி வந்தார். எவ்வளவு கண்டித்தும் அவர் கேட்காததால் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார் சித்ரா. இதையடுத்து அவர்கள் சுவாமிநாதனை அழைத்து கண்டித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்து நீ என்னை காதலிக்காவிட்டால் உன் முகத்தில் ஆசிட் வீசிக் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுதவாறு நடந்த விபரத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து அவரது தந்தை முக்கூடல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிபின் ராஜ்மோகன் மற்றும் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், கிண்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுவாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications