சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 கோடி போதைப் பொருள் சிக்கியது… 2 பேர் கைது
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்த முயன்ற நைஜீரியா நாட்டு பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவங்களில் ரூ.5 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் இருந்து வெளிநாடுகள் சென்ற விமானத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இன்று அதிகாலை 1.30 மணிக்கு பாங்காக் புறப்பட இருந்த விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். சுற்றுலா பயணியாக பாங்காக்கில் இருந்து மலேசியா செல்ல வந்த சென்னை பாரிமுனையை சேர்ந்த அப்பு கலைவாணன் (34) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரது கைப்பை மற்றும் அட்டைப் பெட்டியில் சோதனை போட்டனர். அதில், கேட்டமைன் வகை போதை பொருள் 21 கிலோ இருந்தது. இதன் மதிப்பு 2 கோடி 10 லட்சம். இதையடுத்து, அப்பு கலைவாணன் கைது செய்யப்பட்டார்.
நைஜீரியா பெண் கைது
இதேபோல் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டை சேர்ந்த லிடிசா (30) என்ற பெண்ணின் பையில் 2 கிலோ 800 கிராம் ஹெராயின் போதை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடி 80 லட்சம். இதனையடுத்து லிடிசாவை கைது செய்த போலீசார் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இரண்டு பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications