இலங்கை அரசுக்கு எதிராக சீறும் பாஜக, நாம் தமிழர் கட்சி
சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாள்தோறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு தங்களது குமுறலை வெளியிட்டு வருகிறது.
ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர இருக்கிறது. இதை 30 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்க முடிவு செய்துள்ளன.
ஆனால் ஒட்டுமொத்த தமிழகமே கூப்பாடு போட்டுக் கூக்குரல் எழுப்பியும் இந்திய அரசோ, இலங்கை நட்பு நாடு என்றும் எதிரிநாடு அல்ல என்றும் எகத்தாளம் பேசிக் கொண்டு எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கண்டனம்
தமிழக மீனவர்களை சிறைபிடித்தது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமை தொடர்கதையாகவே நீண்டு கொண்டிருக்கிறது. இலங்கை வாழ் தமிழர்களைத்தான், வாழவிடாமல் வஞ்சிக்கிறது என்ற நிலையில் தமிழக மீனவர்களையும் அடிக்கடி பிடித்து வைத்துக் கொள்வதும் அவர்களது உடமைகளை பறிப்பதுமான தன் அட்டூழியத்தை தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
மீனவர்கள் குமுறல்
அவர் மேலும் தமது அறிக்கையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்துவிட்ட நிலையிலும்கூட, அமைதியை நிலைநாட்ட வேண்டிய தருணத்தில் இத்தகைய வெறிச் செயல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்பாவி மீனவர்கள் மீதான வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நமது கடல் பிரதேசத்தில் மீன் பிடிக்கக்கூட உரிமை இல்லையாவென தமிழக மீனவர்கள் குமுறி கொந்தளிக்கும் நிலை உருவாகியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மீனவ நண்பர்களும் பலமுறை கவலை, கண்டனம் தெரிவித்தபோதும் கூட மத்திய அரசு மௌனமாக வாளாவிருக்கிறது என்றும் சாடியுள்ளார்.
விடுதலை செய்க
ராதாகிருஷ்ணன் தமது அறிக்கையில், பிடித்துவைக் கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இதில் தலையிட்டு மத்திய அரசை வற்புறுத்தி, தமிழக மீனவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் உண்ணாவிரதம்
இலங்கையை போர்க் குற்ற நாடாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர்.
சீமான் பேச்சு
பல்லாவரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈழத் தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டுமெனில், உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்களிடம் ஒரு நேரடியான வாக்கெடுப்பை ஐ.நா. அவை நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். ஆனால், தி.மு.க. அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காது என்று ராஜபக்சே கூறுகிறார் என்றார்.
ராஜபக்சேவுக்கு தைரியம் எப்படி வந்தது?
சீமான் தமது உரையில், இந்தியா தனக்கு எதிராக வாக்களிக்காது என்று எந்த தைரியத்தில் ராஜபக்சே கூறுகிறார்? இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளது என்று இந்தியா கூறினால், நான் இந்தியாவின் போரைத்தான் நடத்தினேன் என்றும், தமிழருக்கு எதிரான அந்த போருக்கு ஆயுதம், ஆலோசனை, ராடார், நிதி என்று எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்து, தமிழினத்தை வேகமாக அழித்தொழிக்கச் சொன்னது இந்தியாதான் என்றும் ராஜபக்சே கூறுவார் என கேள்வி எழுப்பினார்.
நியாயம் கேட்கிறோம்
மேலும். இலங்கையில் தமிழ்ப் பெண்கள் இன்றளவும் கற்பழிக்கப்படுகிறார்கள், அது அரச பயங்கரவாதம் இல் லையா? எங்களின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனுக்காக மட்டும் நியாயம் கேட்க வில்லை, அவரைப் போல் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகளின் படு கொலைக்கு நியாயம் கேட்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பார்த்து பயங்கரவாதிகள் என்கிறீர்கள். மூன்றாண்டுக் காலம் அங்கு போர் நடந்தது. தனது சொந்தங்கள் பல்லாயிரக் கணக்கில் இலங்கை இனவெறி ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட நிலையிலும், தமிழ்ப் பெண்கள் பல நூற்றுக் கணக்கில் கற்பழிக்கப்பட்ட போதிலும், ஒரு சிங்கள பெண்ணின் தாவணியை பிடித்து இழுத்தார்கள் என்று என்றாவது ஒரு புலியையோ அல்லது ஈழத் தமிழர் ஒருவர் மீதோ உங்களால் குற்றம் சாற்ற முடியுமா? என்றும் சீமான் கேட்டார்.
பாலச்சந்திரனின் ரத்தம் மீது உறுதி
தமது உரையில், இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ் மக்களுக்கான தேசம் தமிழீழம். தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழினத்திற்கான விடுதலையே. அதனை பெறாமல் தமிழினம் ஓயாது, அந்த விடுதலையை வென்றெடுக்க பாலசந்திரனின் ரத்தத்தின் மீது உறுதியேற்போம் என்றும் சீமான் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications