ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை

ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கடந்த மாதம் ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் பெண் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரல், கடற்கரை, தாம்பரம், எழும்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் செல்லும் மின்சார ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் மகளிர் ரயில்களில் பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம்-கடற்கரை, தாம்பரம்-கடற்கரை, வேளச்சேரி-கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே காலை, மாலையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கமிஷனர் எஸ்.ஆர். காந்த் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு அவர்களுக்கு பிரச்சனை என்றால் உடனே புகார் செய்ய 24 மணிநேர உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை பெண் போலீசார் பணியில் இருப்பார்கள். அதன் பிறகு கட்டுப்பாட்டு அறை போலீசார் இருப்பார்கள்.
ரயில் பயணத்தின்போது யாராவது பிரச்சனை செய்தால் 044-25353999 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவார்கள். மகளிர் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் உள்ள பெண் பெட்டிகளிலும் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
கடற்கரை-தாம்பரம், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் வழியில் செல்லும் மின்சார ரயில்களில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த ஆண்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications