தென் சென்னைக்கு வருகிறது நெம்மேலி கடல் குடிநீர்: 11ம் தேதி முதல்...
சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் மையத்தில் இருந்து தென் சென்னைக்கு வரும் திங்கட்கிழமை முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதையொட்டி குழாய்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் மையம் துவங்கப்பட்டது. அங்கிருந்து வட சென்னைக்கு தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.908 கோடி செலவில் மேலும் ஒரு கடல் நீரைக் குடிநீராக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து குழாய் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். அதற்காக வேளச்சேரி, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பே தரையில் குழாய்கள் பதிக்கப்பட்டன. அந்த குழாய்களில் உள்ள மண்ணை அகற்றும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த பணி கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டது. வரும் சனிக்கிழமைக்குள் குழாய்கள் முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டுவிடும். இதையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் நெம்மேலியில் இருந்து தென் சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நெம்மேலி மையம் மூலம் வேளச்சேரி, திருவான்மியூர், ஐஐடி, பழைய மகாபலிபுரம் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ரோடு, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications