லவ் மேரேஜ் வேண்டாம்… அரேஞ்டு மேரேஜ் பெஸ்ட் இளசுகள் அமோக ஆதரவு
டெல்லி: கண்ணோடு கண் நோக்கி காதலித்து நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொள்வதை விட பெற்றோர் நிச்சயித்து சொந்த பந்தங்கள் புடை சூழ தட புடலாக திருமணம் செய்து கொள்வதையே இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். இது பற்றி சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தாஜ் ஓட்டல் குழுமம் சார்பில் இப்சாஸ் என்ற மார்க்கெட் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், நாக்பூர், சூரத், கான்பூர், லூதியானா ஆகிய 10 நகரங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.
திருமணத்துக்கு ஆடை, நகைகள் வாங்க மால்கள், பிரதான பஜார் பகுதிக்கு வந்த 18-35 வயதினர் ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

நிச்சயிக்கப்பட்ட திருமணம்
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். அது பார்க், பீச், தியேட்டரில் காதல் ஏற்பட்டு தீர்மானிக்கப்படுவதைவிட வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் முடிவாக வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

அமோக ஆதரவு
இந்தியாவில் 82% பெண்களும், 68% ஆண்களும் (சராசரியாக 75%) நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஆதரிக்கின்றனர். வடஇந்தியாவில் 82 சதவிகிதம் பேர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தையே விரும்புகின்றனர். ஆதரவு இருக்கிறது.

அவசியம் பெண் பார்க்கணும்
பெண் பார்க்கும் சடங்கு அவசியம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. பெண்ணை புடிச்சிருக்கா என்று ஆண்களின் கருத்தை முதலில் கேட்க வேண்டும் என்று நாடு முழுவதும் 10% பேர் கூறினர். அதே நேரம், ‘மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?' என்று பெண்ணிடம்தான் முதலில் கேட்க வேண்டும் என்று தென்மாநிலங்களைச் சேர்ந்த 21% பேர் கூறியுள்ளனர்.

நேருக்கு நேர் சொல்லிடனும்
யாருக்கு சம்மதம் என்பதை முதலில் பெண்ணிடம்தான் கேட்க வேண்டும் என்று 13% ஆண்களும், 8% பெண்களும் கூறினர். பெண், மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று நேருக்கு நேர் சொல்லிவிட வேண்டும் என 33% பேர் கூறியுள்ளனர்.

சடங்கு சம்பிரதாயம் அவசியம்
இதேபோல் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகபட்ச வரவேற்பு இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ‘சங்கீத்' எனப்படும் மெகந்தி மற்றும் இசை நிகழ்ச்சிக்கு 81 சதவிகிதம் பேர் ஆதரவு கூறியுள்ளனர். இதர சம்பிரதாய சடங்குகளுக்கு 71சதவிகிதம் பேர் ஓகே சொல்லியுள்ளனர்.

பேஷியல் போடுங்களேன்
கல்யாண சடங்குகளில் ஒன்றாக 47 சதவிகிதம் பேர் மேக்கப்பை குறிப்பிடுகின்றனர். 46 சதவிகித ஆதரவுடன் ஃபேஷியல் முதலிடத்தில் இருக்கிறது. ஸ்பா, மூலிகை சிகிச்சைக்கு 23 சதவிகித ஆதரவு கிடைத்துள்ளது.

ஜவுளி விருந்து அமர்க்களம்
திருமண ஜவுளி அசத்தலாக இருக்க வேண்டும் என்று 73% பேர், திருமண விழா தூள் கிளப்ப வேண்டும் என்று 65% பேர், விருந்து அமர்க்களமாக இருக்க வேண்டும் என்று 48% பேர் கூறினர்.
தென்இந்திய சமையல் மற்றும் சைனீஸ் விருந்துக்கு 56% ஓட்டு, வடஇந்திய உணவுக்கு 44% ஓட்டு கிடைத்துள்ளது. சராசரியாக 5 முதல் 15 ஐட்டங்கள் உணவில் இடம்பெற வேண்டும் என்கின்றனர் பலர்.

1000 பேர் வரணும்பா
100 முதல் 250 பேரைத்தான் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்பதில் வடக்கு, மேற்கு மாநில மக்கள் உறுதியாக இருக்க.. ‘1000 பேர் வந்தாத்தான் கல்யாணம் களைகட்டும்' என்று சொல்கின்றனர் தென்மாநில மக்கள். (பாசம் ஜாஸ்திப்பா)

பேச்சிலர்ஸ் பார்ட்டி வேணுமே
திருமணம் என்றால் பேச்சிலர்ஸ் பார்ட்டி இல்லாமலா? இது தொடர்பான கேள்விக்கு ‘தண்ணி பார்ட்டி' என்றால் ரிசார்ட்டில் நடத்தலாம் என 34% பேர் கூறியுள்ளனர். அதேசமயம் டீலக்ஸ் ஓட்டலில் நடத்தலாம் என 30% பேரும், ஒதுக்குப்புறமான பண்ணை வீட்டில் என 13% பேரும் கூறியுள்ளனர்.

டாப் 3 ஹனிமூன் இடங்கள்
திருமணம் முடிந்த சூட்டோடு ஒரு வாரத்துக்குள் ஹனிமூன் போக வேண்டும் என்கின்றனர் 80 சதவீதத்தினர். பாரின் என்றால் ஐரோப்பிய நாடுகளை 46% பேரும், அமெரிக்காவை 36% பேரும் குறிப்பிட்டுள்ளனர். பைவ் ஸ்டார் அல்லது செவன் ஸ்டார் ஓட்டலில் தேனிலவு கொண்டாடுவது சூப்பர் என 25% பேர் கூறினர். இந்தியாவில் கோவா, ஊட்டி, ஸ்ரீநகர் என டாப் 3 இடங்களை பட்டியலிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications