மகளிர் சமுதாயம் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தோங்கி செலுத்திட வேண்டும்: கருணாநிதி மகளிர் தின வாழ்த்து
சென்னை: மகளிர் சமுதாயம் மேலும் மேலும் அறிவிலும் ஆற்றலிலும் ஒற்றுமையுடன் சிறந்தோங்கிச் செழித்திட தனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்வதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
மார்ச் மாதம் 8ம் நாள்! உலக மகளிர் நாள்! மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப்படும் எழுச்சித் திருநாள்!
ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் முதன்முதலில் பெற்றுத் தந்தது நீதிக்கட்சி.
அந்த நீதிக்கட்சியின் வழியில் திராவிட இயக்கத்தை வழிநடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் மகளிர் சமுதாயம் முன்னேற்றம் காண்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் காலங்களில் உருவாக்கிச் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
1973-ல் இந்தியாவிலேயே முதல் முறையாகக் காவல் துறையில் மகளிர் நியமனம்; 1975-ல் விதவை மகளிர் மறுவாழ்வுத் திட்டம்; இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்; 8-ம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989-ல் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டம்; அத்திட்டத்தை மேம்படுத்தி 1996-ல் 10-ம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி;
2001-ல் அதிமுக அரசு முடக்கி வைத்த இத்திட்டத்தை 2006-ல் மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாய் என்றும்; 2008-ல் 20 ஆயிரம் ரூபாய் என்றும், 2010-ல் 25 ஆயிரம் ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கியமை; பெண்கள் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989-ல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம்; அதனை 2007-ல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான மகளிர் பயன்பெற வழி வகுத்தமை.
இவை தவிர, 1990-ல் அரசு வேலை வாய்ப்புகளில், கல்வி நிறுவனங்களில் மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு; பெண்களுக்குச் சம சொத்துரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு; 2006-இல் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்;
கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிருக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி, நடைமுறைப்படுத்தியதால் பெண்கள் சமுதாயம் இன்று சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் எழுச்சி பெற்று, ஏற்றம் கண்டு வருவதை எண்ணி எண்ணி இறும்பூதெய்தும் இதயத்துடன், மகளிர் சமுதாயம் மேலும் மேலும் அறிவிலும் ஆற்றலிலும் ஒற்றுமையுடன் சிறந்தோங்கிச் செழித்திட எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications