தங்கநகைக்கு பதிலாக கவரிங் நகை: முத்தூட் கோல்டு பைனான்ஸ் மீது மோசடி புகார்!
தர்மபுரி: அடகுவைத்த தங்கநகைக்கு பதிலாக கவரிங் நகையை கொடுத்து வாடிக்கையாளரை மோசடி செய்ததாக முத்தூட் மினி கோடு லோன் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பேடரல்லி என்ற ஊரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மோகன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று, முத்தூட் மினி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது 47.8 கிராம் எடையுள்ள தங்க நகையை அடமானம் வைத்து 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று, அந்த நகைக்கான தொகையையும், வட்டியையும் செலுத்தி தனது நகையை மீட்டுள்ளார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு சென்று நகையை சோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், அப்போதே, முத்தூட் நிறுவனத்திற்கு சென்று, இது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு அங்கிருந்தவர்கள்,"தவறு நடந்துவிட்டது.உங்களது நகையை கூடிய விரைவில் திருப்பி தந்துவிடுகிறோம்" என்று கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதை நம்பிய மோகன், திரும்ப வந்து விட்டார். பின்னர் நகை கிடைத்த பாடில்லை. தனது நகையை கேட்டு முத்தூட் நிறுவனத்திற்கு பலமுறை சென்றும் அவர்கள் உரிய பதிலை கூறவில்லை.
முதலில் நகையை மாற்றி தருவதாக சொன்னவர்கள், பின்னர் "நகையை தர முடியாது...உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்..!" என்று மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மோகன் நேற்று மாலை தர்மபுரி நகர காவல்நிலையத்தில் முத்தூட் மினி கோல்டு நிறுவனம் மீது மோச்டி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications