கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பழனிச்சாமியின் மகன், உறவினர்கள் கைது
மதுரை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமியின் மகன் சுரேஷ் குமார் உள்ளிட்ட 9 பேர், மேலும் ஒரு புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறி பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கீழையூர் கிராம நிர்வாக அதிகாரி அக்பர்சேட் கீழவளவு போலீசாரிடம் 2 புகார்களை கொடுத்தார். முதல் புகாரில் கீழையூர் கிராமத்தில் உள்ள சர்வே எண் 99-ல் 3 ஏக்கர் 37 செண்டு அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அரசு விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டு இருந்தது.
மற்றொரு புகாரில் சர்வே எண் 626-ல் 9 ஏக்கர் 37 செண்டு அரசு நிலத்தை இதேபோல முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார்கள் தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி, மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், செந்தில்குமாரின் மனைவி சந்திரலேகா, பி.ஆர்.பழனிச்சாமியின் மகள் சிவரஞ்சனி, அக்காள் மகன் முருகேசன், கல்லம்பட்டியை சேர்ந்த கோட்டை வீரன் மற்றும் கம்பெனி நிர்வாகிகள் மீது இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து பி.ஆர்.பழனிச்சாமியின் மகன் சுரேஷ்குமார், உறவினர்கள் தெய்வேந்திரன், ஆறுமுகம், அய்யப்பன், எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் அனுமந்தன், சத்தியராஜ், ஆறுமுகம், ஜோதிபாசு, பரமானந்தம் ஆகிய 9 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications