கேரள எல்லையில்.. கருப்பசாமி கோவிலில்.. ஆடு கோழி பலியிட தடை...!
புளியரை: தமிழக-கேரளா எல்லை புளியரையில் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலில் ஆடு கோழி பலியிட பக்தர்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலுக்கு யாரும் ஆடு கோழியுடன் போய் விடாமல் தடுக்கும் வகையில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கோவில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட எல்லைக்குள் வருகிறதாம். இதனால் கேரள பக்தர்கள் மட்டுமல்லாமல் தமிழக பக்தர்களும் இங்கு போய் ஆடு, கோழி வெட்ட முடியாமல் தவிக்கும் நிலைக்குள்ளாகியுள்ளனர்.

எல்லை மக்களுக்கு குல தெய்வம்
இந்த ஆலயம் தமிழக கேரளா எல்லையோர மக்களுக்கு குலத்தெய்வமாய் விளங்குகிறது. மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இங்குள்ள கருப்பசாமியை வேண்டி செல்வதும், அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இங்குவந்து வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வதும் வழக்கம்.

சபரிமலைக்குப் போவோர் தவறாமல் வரும் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ஆலயத்தை வழிபடாமல் செல்வதில்லை.

கேரள அரசின் கட்டுப்பாடு
இப்படி பல்வேறு சிறப்பு கொண்ட இந்த ஆலயம் கேரளா அரசின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுபாட்டில் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னால் கொல்லம் மாவட்ட ஆட்சி தலைவர் அவரது எல்கையில் வரும் இந்து ஆலயங்களில் ஆடு,கோழி,பலியிட தடை விதித்துள்ளார்.

போலீஸார் குவிப்பு
இதனைதொடர்ந்து இந்த கருப்பசாமி கோவிலிலும் ஆடு,கோழி,பலியிட தடைவிதிக்கப்பட்டு தென்மலை போலீஸ் தலைமை சப் இன்ஸ்பெக்டர் நாசருதீன், தலைமையில் உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மற்றும் 5.போலீசார் இங்கு பாதுகப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக பக்தர்கள் நடத்திய கும்பாபிஷேகம்
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக பக்தர்களால் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சாமியின் சிலைக்கு வெள்ளி அங்கியும் தமிழக பக்தர்களால் செய்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கண்ணகி கோவில் நிலைமை
மேலும் தமிழக மக்களால் வழிபாடு செய்யப்படும் கண்ணகி கோவிலுக்கு தமிழக பக்தர்கள் செல்ல தடையும் கெடுபிடியும் விதிப்பது போல இந்த ஆலயத்தில் காலங்காலமாக நடந்து வந்த வழி பாடு முறையை தற்போது கேரளா அரசு வேண்டுமென்றே மாற்ற நினைப்பது தமிழக கேரளா எல்லையில் வசிக்கும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன சொல்கிறார் எஸ்.ஐ....
தென்மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாசருதீன் இந்தத் தடை குறித்துக் கூறும்போது :கொல்லம் மாவட்டம் தென்மலை அருகே கடந்த சில வாரங்களுக்கு முன் எஸ்டேட் பகுதியில் ஒருகோவிலில் ஆடுவெட்டி சாமிக்கு படையல் போட்டதை கேரளா தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது இதனை தொடர்ந்து தான் இந்தத் தடை உத்தரவு என்றார்.












Click it and Unblock the Notifications