சவூதி மருத்துவமனையில் தூத்துக்குடி முத்துராஜ் மாசிலாமணி உடல்: ரியாத் தமிழ்ச் சங்கம் அறிக்கை

இது குறித்து ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவைப் பிரிவு சார்பில் அஹமது இம்தியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சவூதியில் வாழும் தமிழர்களே உதவுங்கள்! என்று தலைப்பிட்டு கடந்த சில நாள்களாக ஒரு செய்தி நாளேடுகளிலும், ஃபேஸ்புக்கிலும், இணைய தளங்களிலும் வெளியாகியிருந்தது. இதை மனிதாபிமான முறையில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவைப்பிரிவு கையில் எடுத்து கேட்டதில் நடந்த சம்பவம் தெரிய வந்தது.
சம்பவ விவரம்,
பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று முத்துராஜ் மாசிலாமணி அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனம் சாலை விபத்தைச் சந்தித்து வாகனத்தில் சென்ற அவர் வேலை பார்க்கும் குடும்பத்தினர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர். ரியாத்தில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல் கொயா பொது மருத்துவமனைக்கு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த முத்துராஜ் மாசிலாமணி அவர்களை காலை 8:20க்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளார்கள். அன்று காலை 11:30 மணியளவில் அவரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்துவிட்டது.
உடலை இதுவரை யாரும் உரிமைக் கேட்டு வராததால் மருத்துவமனையிலேயே இன்னும் உடல் உள்ளது, அபிலாஷ் என்ற தமிழர் அந்த உடலைப் பார்த்து அவரின் புகைப்படத்தைச் சரிபார்த்து உறுதி செய்துள்ளார். அவர் குடும்பத்தினரின் முழுமையான முகவரி தெரியாததால் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலதிக விபரங்கள் பெற உங்களின் தொலைபேசி எண்ணை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பினால், தொலைபேசியில் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு தூதரக உதவியுடன் ரியாத் தமிழ்ச் சங்கம் உடலை தாயகம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது பற்றிய விவரங்களை அறிய உதவிய, விபத்து நடந்த அல் கொயாவில் வேலைபார்க்கும் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications