விவாகரத்து வழக்கை டிஸ்மிஸ் செய்த பெண் நீதிபதியிடம் செருப்பு கொடுத்த முதியவர் கைது
திருவனந்தபுரம்: மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ததால் ஆத்திரமடைந்த முதியவர் கண்ணூர் குடும்ப நல நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கண்ணூர் எளயாவூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜனகீய பிரகதிகரணவேதி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். அரசு துறைகள் மூலமோ, தனியார் துறை முலமோ யாருக்காவது, ஏதாவது வகையில் சிரமம் ஏற்பட்டால் இந்த அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். இந்த நிலையில் இந்த அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. 5 வருடங்களுக்கு முன் விவாகரத்து கோரி கண்ணூர் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வாய்தா மேல் வாய்தாவாக போய் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி பிரசன்னாகுமாரி பிரபாகரனின் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
மனைவியிடம் இருந்து எப்படியும விவாகரத்து கிடைத்து விடும் என பிரபாகரன் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால் தீர்ப்பு எதிராக அமைந்தது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகளிர் தினத்தன்று பிரபாகரன் கையில் ஒரு பார்சலுடன் குடும்ப நல நீதி்மன்றத்துக்கு சென்றார். அப்போது நீதிபதி பிரச்சனகுமாரி வழக்கு விசாரணையில் பரபரப்பாக இருந்தார்.
ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அரங்கத்திற்குள் நுழைந்த அவர் நீதிபதிக்கு மகளிர் தினத்தை ஓட்டி ஒரு பரிசு கொண்டு வந்திருப்பதாக சத்தம் போட்டு கூறினார். பின்னர் அந்த பார்சலை அவர் நீதிபதியிடம் கொடுக்க முயன்றார். இதையடுத்து காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் அவரை வெளியேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் பிரபாகரனை வெளியேற்றி விட்டு அவரிடமிருந்த பார்சலை கைப்பற்றி பரிசோதித்த போது அதில் 2 செருப்புகள் இருந்தது தெரிய வந்தது. இதை பார்த்த் அங்கிருந்த வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீதிபதிக்கு செருப்பு கொடுப்பதா என பிரபாகரனை அங்கிருந்த வக்கீல்கள் தாக்கினர்.
இதுகுறித்து அறிந்ததும் கூடுதல் போலீசார் நீதிமன்றத்துக்கு விரைந்தனர். பின்னர் போலீசார் பிரபாகரனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications