ஜன சங்க காலம் தொடங்கி, 45 ஆண்டுகளுக்கு பின் உடுப்பி-மங்களூரில் படுதோல்வி அடைந்த பாஜக!

உடுப்பி நகராட்சியை பாஜக தான் தொடர்ந்து தன் வசம் வைத்திருந்தது. பாஜகவின் தாய் கட்சியான ஜன சங்க காலத்தில் இருந்தே இந்த நகராட்சி அதன் வசம் தான் இருந்து வந்தது. கர்நாடகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு முன்பே இங்கு அந்தக் கட்சிக்கு ஆதரவு இருந்து வந்தது.
மேலும் கடந்த பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் உடுப்பி மற்றும் மங்களூரில் பாஜக தான் தொடர்ந்து வென்று வந்தது.
இந் நிலையில் முதல் முறையாக மங்களூர் மாநகராட்சியையும் உடுப்பி நகராட்சியையும் பாஜக இழந்துள்ளது. இந்த இரு இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இந்தப் பகுதியில் தான் மதவாத இயக்கங்களின் செயல்பாடுகளும் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபகாலமாக ஸ்ரீராம் சேனா போன்ற அமைப்புகள் பொது இடத்தில் ஆண் நண்பர்களுடன் பேசும் பெண்களைத் தாக்குவதும், பார்களுக்குள் புகுந்து பெண்களை அடித்து உதைப்பதும், பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடினால் வீடுகளுக்குள் புகுந்து அடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அமைதி காத்து வந்தது. ஸ்ரீராம் சேனா தலைவர் முத்தாலிக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் 'பிங்க் ஜட்டி' (Pink underwear campaign) இயக்கம் நடத்தியதும், அவருக்கு கூரியரில் ஆயிரணக்கணக்கான ரோஸ் வண்ண ஜட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இப்போது இந்தப் பகுதியில் பாஜக முதன்முறையாக தனது செல்வாக்கை இழந்துள்ளது. பாஜகவில் நடந்து வந்த கோஷ்டிப் பூசல், பாஜக அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு காரணமாக இருந்தாலும் தீவிர மதவாத அமைப்புகளின் செயல்பாடுகளே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications