'அருள்' வந்து சாமியாடி அங்குமிங்கும் உருண்டு ரூ. 2 லட்சம் சிலைகளை துவம்சம் செய்த பெண்!
கரூர்: கரூர் அருகே கோவில் திருவிழாவின்போது அருள் வந்து சாமியாடிய பெண், அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 35 மண் சிலைகளை போட்டு உடைத்து சின்னாபின்னமாக்கியதால் கடுப்பாகிப் போன கோவில் நிர்வாகம் போலீஸில் புகார் கொடுத்தது. அதன் பேரில் அப்பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் மேல் ஒரத்தை என்ற ஊரில் புகழ்பெற்ற அன்னமார், பவனியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி கடந்த ஒருவாரமாக திருவிழா நடந்து வருகிறது.
இதனால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, வந்த கீழ் ஒரத்தையைச் சேர்ந்த மலர்கொடி என்ற 40 வயதுப் பெண்ணுக்கு திடீரென அருள் வந்து விட்டதாம்.
இதையடுத்து பலத்த சவுண்டு கொடுத்தபடி சாமியாடிய அவர் கீழே படுத்து உரு்ண்டுள்ளார், புரண்டுள்ளார். அப்போது, கோவிலில் பக்தர்கள் வேண்டுதலுக்காக கொண்டுவந்து சாமியின் முன்னாள் வைக்கப்பட்டிருந்த வர்ணம் பூசப்பட்ட, 35 மண் சிலைகள் கீழே தள்ளி, மலர்கொடி உடைத்தார்.
உடைக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு, இரண்டு லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகி செல்லமுத்துவின் மகன் கைலாசம் மலர்கொடி மீது வேலாயுதம் பாளையம் போலீஸில் புகார் செய்தார்.
கோவில் சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் மலர்கொடி மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications