சென்னையிலும் இனி மினி பஸ்.. அரசே இயக்குகிறது- முதல் கட்டமாக 100 பஸ்களை இறக்குகிறது!
சென்னை: சென்னையில் மினி பஸ்களை அரசு அறிமுகப்படுத்துகிறது. முதல் கட்டமாக 100 பஸ்களை அரசே இயக்கவுள்ளது.
தமிழக மக்களுக்கு திமுக செய்த சில நல்ல விஷயங்களில் இந்த மினி பஸ்ஸும் ஒன்று. ஆட்டோவைத் தவிர வேறு எந்த வாகனத்தையும் நம்ப முடியாத நிலையில் ஆட்டோக்களுக்கு கொட்டி அழுது வந்து மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்ததுதான் இந்த மினி பஸ்.
சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் இன்று மினி பஸ் மக்களுக்கு பெரும் உதவியாய் இருந்து வருகிறது. தமிழக மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியவை இந்த மினி பஸ்கள்.

இனி சென்னையிலும்
இதுவரை சென்னை தவிர்த்து அனைத்துப் பகுதிகளிலும் மினி பஸ் இருந்து வந்தது. சென்னைக்குள் மினி பஸ் வராமல் போனதற்கும் கூட திமுக தொழிற்சங்கமே காரணம். தற்போது சென்னையிலும் மினி பஸ்களை அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

முதல் கட்டமாக 100 பஸ்கள்
தமிழகத்தின் பிற பகுதிகளில் மினி பஸ்கள் தனியார்வசம்தான் உள்ளன. ஆனால் சென்னையில் மட்டும் அரசே இயக்கவுள்ளது. முதலில் 100 பஸ்களை களம் இறக்குகிறது அரசு.

மே மாதம் முதல் ஓடலாம்
மே மாதம் முதல் சென்னையில் மினி பஸ்களை ஓட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பாடி கட்டப் போகும் டாடா மோட்டார்ஸ்
மினி பஸ், சேசிஸ் தயாரிப்புக்கு அசோக் லேலெண்ட், டாடா மோட்டார்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளை சமர்பித்தது. இதில் குறைந்த புள்ளிகளை சமர்பித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த நிறுவனத்துக்கு கொள்முதல் உத்தரவு வழங்கப்பட்டது.

சீக்கிரமே பாடி கட்ட ஏற்பாடு
100 மினி பஸ்கள் என்பதால் குறுகிய காலத்தில் சேசிஸ் தயாரித்து மாநகர போக்குவரத்து கழகத்திடம் அந்நிறுவனத்தினர் ஒப்படைத்து விடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மே மாதம் முதல்
பாடிகட்ட குறைந்த பட்சம் 25 நாட்கள் ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 சேசிஸ்களில் பாடி கட்ட முடியும். எனவே அடுத்த 2 மாதங்களில் சென்னையில் மினி பஸ்கள் ஓடத்தொடங்கும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ரயில் நிலையம் டூ பஸ் ஸ்டாண்ட்
இந்த மினி பஸ்களை முதலில் ரயில் நிலையங்களையும் பஸ் நிலையங்களையும் இணைக்கும் வகையில் இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாம். பின்னர் படிப்படியாக பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று தெரிகிறது.

இது சரிப்படுமா...?
ஆனால் வெறுமனே ரயில் நிலையங்களையும், பஸ் நிலையங்களையும் மட்டும் இணைக்கும் வகையில் இந்த பஸ்களை இயக்கினால் மக்களுக்கு அது முழுமையான பயன் தருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications