சோனியா காந்தி புதிய சாதனை: காங்கிரஸ் தலைவராக 15 ஆண்டுகள் நிறைவு

கடந்த 1998ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையடுத்து அதே ஆண்டு மார்ச் மாதம் சோனியா காந்தி அக்கட்சியின் தலைவரானார். கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. தனக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க மறுத்துவிட்டார் சோனியா. அவருக்கு பதிலாக பொருளாதார நிபுணரும், அரசியல் தலைவருமான மன்மோகன் சிங்கை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தார்.
66 வயதாகும் சோனியா 4 முறை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது நான்காவது முறையாக தலைவர் பதவியில் இருக்கும் அவரது பதவிக்காலம் வரும் 2015ம் ஆண்டு நிறைவடைகிறது. 127 ஆண்டு காலத்தில் 15 ஆண்டுகளாக ஒருவர் கட்சியின் தலைவராக இருப்பது இதுவே முதல் முறை.
இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங் கூறுகையில்,
சோனியா காங்கிரஸ் தலைவரான போது கட்சியின் நிலைமை சரியில்லை. உறுப்பினர்கள் வெளேயேறிக் கொண்டிருந்தனர். 2004ம் ஆண்டு தேர்தலில் லோக்சபாவில் 150 சீட்களைப் பிடித்தது மற்றும் 2009ம் ஆண்டில் 205 சீட்களைப் பிடித்தது உண்மையிலேயே ஒரு அதிசயம் தான். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று 15 ஆண்டுகளை நிறைவு செய்த சோனியாவுக்கு எனது வாழ்த்துக்கள். காங்கிரஸில் வேறும் யாரும் 15 ஆண்டுகளாக தலைவராக இருந்ததில்லை என்று நினைக்கிறேன் என்றார்.
சோனியாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications