கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அடிதடி: மருத்துவமனையில் அதிமுக பெண் கவுன்சிலர்கள்
கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் ஏற்பட்ட ரகளையில் பெண் உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர்.
கோவை மாநாகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மேயர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இன்று மாலை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
பிற்பகல் 3.30 மணிக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டும் என்று மேயர் கூறியவுடன் பட்ஜெட்டைப் படித்துப் பார்க்க நேரம் வேண்டும் என்று திமுக எதிர்க்கட்சி தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். அதற்கு மேயர், இங்கு அதிமுக உறுப்பினர்கள் தான் அதிக அளவில் உள்ளோம். அதனால் மதியமே விவாதத்தை வைத்துக் கொள்ளலாம், அனைவரும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றார்.
உடனே திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் நாங்கள் ஒன்றும் சாப்பிட வரவில்லை, விவாதிக்க வந்துள்ளோம் என்று தெரிவித்து மேயரை அரங்கில் இருந்து வெளியேறவிடாமல் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மீனா லோகநாதன் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த காயத்ரி வெங்கடாச்சலம் ஆகியோரை அதிமுக உறுப்பினர்கள் சேர்ந்து தாக்கினர். இதையடுத்து எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து போக மாட்டோம் என்று அவர்கள் இருவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக உறுப்பினர்கள் தங்களை தாக்கியதாகவும், அதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறி அதிமுக உறுப்பினர்கள் அன்னம்மாள், கௌரி ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications