தமிழர்களுக்கு துரோகமிழைத்த கருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்- பழ.நெடுமாறன்!
இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி புதுக்கோட்டையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டதை மேற்கொண்டுள்ள அரசு மன்னர் கல்லூரி மாணவர்களை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
புதுகை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்தக் காரணங்களுக்காக இந்த உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொள்ளவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்துக்கும் அங்கு எஞ்சியுள்ள தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற இன உணர்வோடு, கடமை உணர்வோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களைப் போல தமிழகம் முழுதும் மாணவர்கள் போராட்டங்களின் ஈடுபட்டுள்ளனர். இவர்களை எந்த அரசியல் கட்சியும் தூண்டிவிடவில்லை. தன்னெழுச்சியான போராட்டமாகும். மற்ற எல்லா இடங்களிலும் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ள நிலையில், இங்கு நடைபெறும் போராட்டத்துக்கு தற்காலிக பந்தல் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அறவழிப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது.
டெசோ அறிவித்த வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதா என்பது குறித்து பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியும். அது படுதோல்வி அடைந்ததை வழக்கம் போல உண்மையைத் திரித்து பேசும் கருணாநிதி முழு வெற்றி எனக் கூறுகிறார்.கடந்த 2009ம் ஆண்டு பிப்.4 -ம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதை தனது அதிகாரத்தின் மூலம் தடுத்தார். அப்போது என்னையும் அச்சுறுத்தினார்.
இலங்கையில் இனப்படுகொலை உச்சத்தில் இருந்தபோது முதல்வராக இருந்த கருணாநிதி தமிழர்களை காப்பாற்ற எந்தவித முயற்சியும் செய்யவில்லை. இதற்காக தமிழக மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் மக்கள் ஒருபோதும் கருணாநிதியை மன்னிக்க மாட்டார்கள் என்றார்.