அடக் கருமாந்திரமே... பிச்சைக்கார சிறுவனிடம் ரூ.3000 பணத்தை அடித்துப் பிடுங்கிய போலீஸார்
வேலூர்: வேலூரில் பிச்சை எடுத்து வந்த 15 வயது சிறுவனை மிரட்டி அடித்து அவன் பிச்சை எடுத்து சேகரித்து வைத்திருந்த 3000 ரூபாய் பணத்தை போலீஸ்காரர்கள் சிலர் பிடுங்கிக் கொண்ட செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் 15 வயதான சிறுவன் ஒருவன் பிச்சை எடுத்து பிழைத்து வருகின்றான். அவனுக்கு ஒரு கை கிடையாது. இரவில் கடை முன்பு படுத்துக் கொண்டு பகலில் பிச்சை எடுப்பான்.
பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்தை தன்னிடமுள்ள சாக்குப் பையில் வைத்திருப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு இரவில் ரோந்து வந்த வடக்கு காவல் நிலையப் போலீஸார் அந்தப் பையனை எழுப்பியுள்ளனர். பின்னர் அவன் வைத்திருந்த சாக்குப் பையை எடுத்துப் பார்த்து சோதனை நடத்தியுள்ளனர். அதில் கொஞ்சம் பணமும், சில்லறைக் காசுகளும் இருந்தன.
இதையடுத்து அவனை கோட்டைக்கு அழைத்துப் போனார்கள். அவனை அடித்து துரத்தி விட்டு சாக்குப் பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டனராம். பிறகு அதை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பரவி அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த விவகாரம் மாவட்ட எஸ்.பி. ஈஸ்வரன் வரை போய் விட்டது. அவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாராம்.