அரசு பேருந்து டீசல் விலை உயர்வுக்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை

தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் பிராஜ் கிஷோர் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஜனவரி 18ம் தேதிக்கு முன்பு (போக்குவரத்துகழக பங்கில்) டீசல் விலை லிட்டருக்கு ரூ.49.72-ஆக இருந்தது. தனியார் பங்கில் அதன் விலை ரூ.50.72. தனியார் பங்கில் வைக்கப்பட்ட விலையைவிட ஒரு ரூபாய், அரசு பஸ்களிடம் இருந்து குறைவாக வசூலிக்கப்பட்டது. ஜனவரி 18ம் தேதி மத்திய அரசு டீசல் விற்பனையில் இரட்டைவிலைக் கொள்கையை அமல்படுத்திய பிறகு மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு காட்டப்பட்ட சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. ஜனவரி 17ம் தேதி, இது சம்பந்தமாக அறிவிப்பாணை ஒன்றை மத்திய பெட்ரோலியத்துறை வெளியிட்டுள்ளது. ஐ ஸ்பீடு டீசலை மொத்தமாக வாங்கும் மாநில போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே போன்ற அமைப்புகளுக்கு மானிய விலையில் டீசல் பெற தகுதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
சில்லறை விலைக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐ ஸ்பீடு டீசல் விலை லிட்டருக்கு 0.55 பைசாவும், மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலை லிட்டருக்கு ரூ.11.81 என்றும் (சில இடங்களில் ரூ.11.66) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.743.55 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இது தான் அதிகபட்ச விலை உயர்வாக உள்ளது. இரட்டை விலைக் கொள்கையால் எங்களுக்கு கிடைத்து வந்த டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் மீது தான் இந்த சுமை சுமத்தப்படும் நிலை ஏற்படுகிறது.
கூடுதல் விலையை மக்கள் மீது சுமத்தி விட்டு அதை போக்குவரத்துக்கழகங்கள் தாங்கிக்கொள்ளும் என்ற தவறான கற்பனையின் மூலம் விலைக் கொள்கையை மாற்றிவிட்டனர். சொந்த வாகனங்களை வாங்க முடியாத ஏழைகள் தான் பஸ்களில் அரசு பஸ்களில் போய்க் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்கள் மீது பழுவை சுமத்த முடியாது.
எனவே ஐ ஸ்பீடு டீசல் விலை உயர்வு முற்றிலும் சட்ட விரோதமாகும். அது ஏழைகளுக்கு எதிரான கொள்கையாகும். இந்த விவகாரத்தில் மனதை செலுத்தாமல் விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் மொத்த கொள்முதல் செய்வோர் பிரிவில் இருந்து மீன்பிடி தொழில் பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில போக்குவரத்து கழகங்களுக்கு அதுபோன்று விலக்கு அளிக்காமல் இருப்பதை நியாயப்படுத்தவில்லை. இது சம்பந்தமாக பிரதமருக்கு முதல்வர் கடந்த ஜனவரி 24ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே இந்த ஐ ஸ்பீடு டீசல் விலை உயர்வை சட்டவிரோதமானது என்று தடை விதித்து உத்தரவிட வேண்டும். இந்த விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அல்லது மொத்த டீசல் கொள்முதல் பிரிவில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கு விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் இது குறித்து மத்திய அரசு மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கு ஐ ஸ்பீடு டீசல் விலையை உயர்த்தி விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications