சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவருக்கு, பாராட்டிற்கு பதில்... வேலை பறிப்பு!
லண்டன்: கடற்கரையில், சுறாமீன் தாக்குலில் இருந்து, குழந்தைகளை காப்பாற்றியவர், பொய் காரணம் கூறி விடுப்பில் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
பிரிட்டனை சேர்ந்த, 62 வயதான, பால் மார்ஷல்சீயும், அவரது மனைவியும், சேவை நிறுவனமொன்றில், பணிபுரிகின்றனர். இரண்டு மாத விடுப்பில், குடும்பத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு, சுற்றுலா சென்றிருந்தனர்.
ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள, புல்காக் கடற்கரைக்கு சென்றிருந்தபோது, , கடற்கரையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை, ஆறடி நீளமுள்ள சுறாமீன் தாக்க முற்பட்டதை பார்த்த மார்ஷல்சீ, ஓடிச் சென்று, சுறாமீனின் வாலைப் பிடித்து இழுத்து, அதை கடலுக்குள் தள்ளினார். இச்சம்பவத்தை, எதேச்சையாக படமெடுத்த, ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனம், அதை உலகமெங்கும் ஒளிபரப்பியது.
உலகமெங்கும் இருந்து, மார்ஷல்சீயின் வீரச் செயலுக்கு, பாராட்டுகள் குவிந்தன. ஆனால், அவர் வேலை செய்யும் சேவை நிறுவனமோ, அவரையும், அவரது மனைவியையும், பணிநீக்கம் செய்வதாக, கடிதம் அனுப்பி அதிர்ச்சியளித்துள்ளது.
'மருத்துவ காரணங்களுக்காக, விடுப்பு எடுத்து விட்டு சுற்றுலா சென்றதற்காக, நீங்கள் வேலை நீக்கம் செய்யப்படுகிறீர்கள்' என, கடிதத்தில், அந்நிறுவனம் காரணம் குறிப்பிட்டுள்ளது. இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த மார்ஷல்சீ, 'இந்த வயதுக்கு மேல், எப்படி வேறு வேலை தேடுவது' என்ற கலக்கத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications