பெண்கள் மத்தியில் உட்கார்ந்து கொண்டு வெறித்துப் பார்ப்பது, அசிங்கமாக பேசுவது.. போதகர் கைது!
கோவை: பெண்கள் மத்தியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்களை வெறித்துப் பார்ப்பது, ஆபாசமாகப் பேசுவது, முகத்தை மூடாதீர்கள் என்று பெண்களின் முக்காட்டை நீக்கச் சொல்வது, வீட்டுக்கு வருமாறு கூறுவது என்று நடந்து கொண்ட கிறிஸ்தவ போதகர் போலீஸார் கைது செய்தனர்.
கோவை ஒண்டிப்புதூரில் உள்ளது சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம். இங்கு பாதிரியாராகவும், போதகராகவும் இருந்தவர் ஜான் மார்க். இவருக்கு 63 வயதாகிறது. ஆனால் வயதுக்கேற்ற செயல்பாடுகள் இவரிடம் இல்லை. மாறாக தனது சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார்.
இதுகுறித்து சர்ச்சைச் சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரியார் ஜான்மார்க் வற்புறுத்துகிறார். பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார்.
எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார். தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார் என்று புகாரில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து விசாரித்த போலீஸார் ஜான் மார்க்கைக் கைது செய்தனர்.