புழல் சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பாலமேடை சேர்ந்தவர் சங்கர் (வயது49). கடந்த 2011-ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். 1-வது பிளாக்கில் உள்ள அறையில் 10 கைதிகளுடன் அடைக்கப்பட்டு இருந்தார்.
நேற்று இரவு மற்ற கைதிகளுடன் சகஜமாக பேசி விட்டு அறையில் தூங்க சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிறை கம்பியில் லுங்கியை கயிராக திரித்து சங்கர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரோந்து வந்த சிறை போலீசார் சங்கர் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக உடன் இருந்த மற்ற கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் திகார் சிறையில் இரண்டு கைதிகள் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது புழல் சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் கைதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications