மத்திய அரசில் திமுக நீடித்தது தான் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட பெரிய தீமை: இந்திய கிறிஸ்தவர் முன்னணி
சென்னை: "ஈழத்து தமிழ் மக்களின் சிதைக்கு மூட்டப்பட்ட தீயில் குளிர் காய்ந்துவிட்டு இப்பொழுது ஈழப் போரில் மாண்ட போராளிகளின் காலடி மண்ணெடுத்து திலகமாக இட்டுக் கொண்டு..." என்று கூறுவது கருணாநிதியின் நீலிக்கண்ணீர் என இந்திய கிறிஸ்தவர் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து இந்திய கிறிஸ்தவர் முன்னணியின் தேசிய தலைவர் எம்.எல் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட ஓரளவு வலுவான முதல் தீர்மானத்தை இந்திய அரசு வலுவிழக்கச் செய்தபோது கலைஞர் அதை கண்டு கொள்ளவில்லை. கடந்த நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து கொண்டு பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்து தீர்த்த நிலையில் இப்பொழுது இரண்டாவது முறையாக அமெரிக்காவின் சார்பில் 4 முறை திருத்தி விட்டு (அதாவது நீர்த்துப் போக வைத்து விட்டு) கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்தை காங்கிரஸ் அரசு ஆதரிக்காத காரணத்தால் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறியிருப்பது நகைப்பிற்குரியதாக இருக்கிறது.
இது ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளின் வீரதியாகத்தை கேவலப்படுத்தும் விதமாக உள்ளது, அரசியல் உள்நோக்கம் உடையதாக இருக்கிறது.
லட்சக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள்கொடி உறவுகளாகிய "ஈழத்து தமிழ் மக்களின் சிதைக்கு மூட்டப்பட்ட தீயில் குளிர் காய்ந்துவிட்டு இப்பொழுது ஈழப் போரில் மாண்ட போராளிகளின் காலடி மண்ணெடுத்து திலகமாக இட்டுக் கொண்டு..." என்று கூறுவது மிகவும் அபத்தமான நாடகமாக தோன்றுகிறது.
உலக அரங்கில் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இத்தீர்மானத்தில் உலகத் தமிழர்களின் ஒரே முக்கியக் கோரிக்கையாகிய "சிங்கள இனவாத ராணுவமும், அரசும் செய்த படுபாதகக் கொலைகள், போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை தேவை" என்பது இத்தீர்மானத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையே வலியுறுத்தி இந்த கருத்தை/வரிகளை இத்தீர்மானத்தில் சேர்த்து வலுவான உறுதியான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று விரிவான கடிதம் ஒன்றை பிரதமருக்கு நேற்று எழுதியுள்ள தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களை இந்திய கிறிஸ்தவர் முன்னணி பாராட்டுகிறது.
இதன் மூலம் தமிழக கிறிஸ்தவ மக்கள் கலைஞருக்கு கூற விரும்புவது என்னவென்றால் "இவ்வளவு (4 ஆண்டுகள்) காலம் மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடித்தது தான் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட பெரிய தீமை. இனி வரப் போகிற ஓர் ஆண்டு காலத்தில் மத்திய அரசால் தமிழ் இனத்திற்கு இதைவிட பெரும் தீமை ஒன்றும் இழைக்க இயலாது.
ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் தாராளமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் பங்காற்றலாம். உங்கள் நாடகத்துக்கு நன்றி! நன்றி! நன்றி! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications