கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவேன் என ஸ்டாலின் மிரட்டவில்லை - கருணாநிதி

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா கடுமையான திருத்தங்களை மேற்கொள்ளாததால் அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டது.
திமுகவின் இந்த முடிவுக்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்றும் இதுபற்றி கருணாநிதியுடனான விவாதத்தின் போது, அரசுக்கான ஆதரவை விலக்காவிட்டால் கட்சியில் தாம் வகித்து வரும் பொறுப்பை ராஜினாமா செய்வேன் என்று கூறியதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை நிராகரித்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, இந்து நாளேட்டின் செய்தியில் உண்மை இல்லை என்றும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கருணாநிதி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தி.மு.கழகத்தை பொறுத்த வரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவோ எடுப்பதில்லை. குறைந்தபட்சம் கழகத்தின் தலைமையிலே உள்ள முன்னோடிகள் கூடிக் கலந்து பேசி பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்த பின்னர்தான் முடிவெடுப்பது வழக்கம். செய்தியாளர்கள் பல முறை சில அதிமுக்கியமான பிரச்சினைகள் குறித்து கேள்வி கேட்கும்போது கூட, கழகத்தின் செயற்குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித்த பிறகு தான் முடிவெடுத்து அறிவிக்கும் என்று நான் பல முறை கூறியிருக்கிறேன்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் தொடர்ச்சியாக நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மற்றும் கழகத்தின் மூத்த செயலாளர்கள் ஆகியோரும் நீண்ட நேரம் விவாதித்த பிறகு ஒருமனதாக எடுத்த முடிவினைத் தான் 19-ந்தேதி காலை செய்தியாளர்களுக்கு அறிவித்தேன். உண்மை இவ்வாறிருக்க ஒரு ஆங்கில நாளிதழ் உள்ள படியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகா விட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாகப் பயமுறுத்தியது தான் காரணம்" என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது வருத்தத்திற்குரிய ஒன்றாகு என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications