இனி யாரும் தீக்குளித்து உயிரிழக்க வேண்டாம் வைகோ வேண்டுகோள்
சென்னை: இலங்கைத் தமிழருக்காக யாரும் தீக்குளித்து உயிரினை மாய்த்துக்கொள்ளவேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ் ஈழ விடியலுக்காக நேற்று இரவு வானகரத்தில், தமிழக விடுதலை இயக்கத்தினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விக்ரம் என்ற இளைஞர் தீக்குளித்து தன் உயிரைத் தியாகம் செய்தார் என்ற செய்தி நெஞ்சில் பேரிடியாக விழுந்தது.
சிங்களக் கொடியோர் நடத்திய தமிழ் இனப் படுகொலை தமிழர் இதயங்களில் நெருப்பைப் பற்றவைத்துவிட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத விதத்தில், தமிழகத்தில் இலட்சோப இலட்சம் மாணவர்கள் ஊண் உறக்கம் துறந்து தங்களை வருத்திக்கொண்டு ஈழ விடியலுக்காக அறப்போர் நடத்துகின்றனர்.
வீரத் தியாகி முத்துக்குமார் வைத்த நெருப்பை இதயத்தில் ஏந்தியவாறு, விக்ரம் தன்னை மரணத் தீயில் பலியிட்டுள்ளார். உயிரோடு இருந்து தமிழ் ஈழ விடியலுக்காக போராட வேண்டிய தமிழர்கள் இப்படி தீக்குளித்து தங்களை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
விக்ரம் அவர்களின் தியாக மரணத்தால், கதறித் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications