பட்ஜெட்டில் எதுவுமே இல்லையே… வைகோ

தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், பயிர் செய்து அறுவடைக்கு வழியின்றி அனைத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும்; பயிர் செய்ய முடியாமல் துன்பப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சியால் தமிழகம் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் படும் பெரும் துன்பத்திலிருந்து மீள இத்தகைய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற இன்றைய காலகட்டத்தில் தேவையான கோரிக்கைகளை இந்த நிதிநிலை அறிக்கை சற்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. விவசாய விளைபொருள் கிடங்குகள் அமைப்பதற்குக் கடந்த நிதிநிலை அறிக்கையில் வெளியான திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை.
கரும்பு கொள்முதல் விலையை ஒரு டன்னுக்கு ரூபாய் 3,500 ஆகவும், நெல் கொள்முதல் விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1,500 ஆகவும் உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இலவசத் திட்டங்களுக்கு ரூபாய் 1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், மின்சார உற்பத்திக்கான புதிய திட்டங்கள், சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை உருவாக்க அதற்கான வரி இரத்து போன்ற ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்கவில்லை. காஞ்சி மாவட்டம், செய்யூரில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம் அறிவிப்போடு இருக்கிறது. கட்டமைப்புப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மாவட்ட மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை அரங்குகள் மேம்படுத்த, மிகவும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அதுபோலவே, 24 மணி நேர மருத்துவ உதவி மையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டதும் கிடப்பில் உள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக, கல்வி வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட ஒதுக்கப்பட்டு உள்ள நிதி குறைவு ஆகும்.
தமிழ் நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளைகள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும், பண்பாட்டு மரபுகள் சிதைவதற்கும் காரணமாக உள்ள மதுக் கடைகளை மூடி, முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக பெண்களின் கோரிக்கையை தமிழக அரசு அலட்சியப்படுத்தி விட்டது.
தமிழக நிதி அமைச்சர் தாக்கல் செய்து உள்ள நிதிநிலை அறிக்கை, ஏமாற்றத்தைத் தருகிறது.












Click it and Unblock the Notifications