கோவையில் இருந்து சென்னைக்கு ஸ்கூட்டியில் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
சென்னை: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் கோவையிலிருந்து ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக சென்னைக்கு வந்தார். ரவுடிகளிடம் மாட்டவிருந்த அவர் போலீஸாரால் காப்பாற்றப்பட்டு பத்திரமாக அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வாழ்க்கை ரொம்ப சின்னது. பெரிது போலத் தோன்றினாலும் எல்லாமே விரல் சுட்டும் நேரத்தில் முடிந்து போய் விடும். இந்த குறுகிய கால வாழ்க்கையில்தான் எத்தனை துயரங்கள், எத்தனை சோகங்கள், எத்தனை சவால்கள்.. எல்லாவற்றையும் சமாளித்து வெல்வதுதானே வாழ்க்கையின் மகா தத்துவம்.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளம் பெண் சூரியாவின் வாழ்க்கை மிகப் பெரிய சோகமயமானது. சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்து விட்டார். தாயார் சாந்தி மற்றும் 3 சகோதரிகளுடன் வாழ்க்கை. சாந்தி கடுமையாகப் போராடி தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார்.
சூர்யா நன்றாகப் படிக்கக் கூடியவர். இதனால் அவரை ஒரு ஹோமில் சேர்த்து படிக்க வைத்தார். சூரியாவும் சூட்டிகையாக படித்தார். பட்டதாரியும் ஆனார். ஆனால் காலத்தின்கோலம் பாருங்கள்.. படித்தும் கூட அவரால் மேலே வர முடியவில்லை. மேலும் தாயாரின் நிலையும் மனதை வருத்தவே அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து மகளை கோவைக்கு அழைத்து வந்த சாந்தி, அங்கு அவரது பாட்டி வீட்டில் வைத்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு விடுவிடுவென தனது வீட்டை விட்டு வெளியேறிய சூர்யா, ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
நேராக பெட்ரோல் பங்குக்குப் போன அவர் அங்கு புல்லாக வண்டியை நிரப்பிக் கொண்டு நேராக சென்னையை நோக்கி ஓட்ட ஆரம்பித்தார். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை எந்தவித பயமும் இல்லாமல் ஓட்டியே கடந்த அவர் திருவான்மியூர் வந்து சேர்ந்தார்.
நள்ளிரவு வாக்கில் திருவான்மியூர் வந்த அவரை சிலர் தவறாக பயன்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அப்போது பார்த்து அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் சூர்யாவை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றார். அங்கு விசாரித்தபோதுதான் சூர்யாவின் நிலை தெரிய வந்தது.
அழகான தமிழிலும், ஆங்கிலத்திலும் தெளிவாகப் பேசியுள்ளார் சூர்யா. ஆனால் அவரை பாதித்த மன அழுத்தம்தான் அவரது நிலையைப் பரிதாபமாக்கியுள்ளது. சாந்திக்குத் தகவல் கொடுத்து அவரை வரவழைத்த போலீஸார் பின்னர் அவரிடம் சூர்யாவை ஒப்படைத்தனர். கண்ணீர் மல்கமகளைக் கட்டி அணைத்து அழுத சாந்தி மகளுடன் கோவை கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications