தானேவில் மனைவி, மகன்கள் கண் முன்னே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த துணை கமிஷனர்
தானே: மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஹோட்டல் ஒன்றில் தனது குடும்பத்தார் கண் முன்பு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று துணை எஸ்.பி. ஆனவர் சஞ்சய் பானர்ஜி(45). அவர் மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு துணை கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். அவர் நேற்று தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் மதிய உணவு சாப்பிட தானேவில் உள்ள கோவா போர்ச்சுகீஸ் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தனது குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீர் என்று துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக் கொண்டார்.
இதைப் பார்த்த அவரது மனைவியும், மகன்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அவரை தானே பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவர் தனது மனைவியுடன் சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. அவர் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சஞ்சய் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீவிரவாத தடுப்பு பிரிவில் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பிரிவுக்கு வரும் முன்பு நான்டெட், தானே மற்றும் மும்பையில் பணியாற்றி உள்ளார். அவர் ஓய்வு பெற்ற ஐஜி ஏகே பானர்ஜியின் மகன் ஆவார்.












Click it and Unblock the Notifications