சட்டசபையில் அடிதடியில் ஈடுபட்ட தேமுதிகவின் 6 எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு சஸ்பென்ட்: சபாநாயகர் உத்தரவு!
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரை ஓராண்டு காலம் சஸ்பென்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருக்கிறார்.
சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதற்காக தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகனை மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்கள் தாக்க முயற்சித்தனர். இதை மற்றொரு தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார். இதனால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் முருகேசன், அருள்செல்வன், செந்தில்குமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, கொறாடா சந்திரகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டசபையின் உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை சட்டசபையில் உரிமைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரும் தமிழக சட்டசபையில் இருந்து ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்த ஓராண்டு காலம் எம்.எல்.ஏக்கள் என்ற தகுதியை அவர்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications