அரவிந்த் கெஜ்ரிவாலின் கால வரையற்ற உண்ணாவிரதம்: மக்கள் ஆதரவுடன் தொடர்கிறது
டெல்லி: முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான, காங்., அரசு, மின் கட்டணம், தண்ணீர் கட்டணத்தை உயர்த்தியது. கட்டண உயர்வு, அதிகமாக இருப்பதாகவும், இதை, வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஏழை மக்கள் கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சனிக்கிழமையன்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது.

யார் இந்த கெஜ்ரிவால்?
அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவிலுள்ள இசாரில் 1968ஆம் ஆண்டில் பிறந்தவர். ஐஐடி கரக்பூரில் 1989ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அங்கு பணி புரியும்போது அரசுத்துறையில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுக்கிறது என்பதை அறிந்தார்.

தேடுதலின் துவக்கம்...
தான் பணியில் இருக்கும்போதே ஊழலுக்கு துணைபுரியும் செயலாக்கங்களை மாற்றவும் எதிர்க்கவும் போராடி வந்தார். வருமானத்துறை அலுவலகத்தில் ஒளிவின்மையைக் கொணர பல மாற்றங்களை துவக்கி வைத்தார்.

குடிமக்கள் இயக்கத்தின் தோற்றம்
ஜனவரி 2000ஆம் ஆண்டில் தற்காலிக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் - என்ற டெல்லியை மையமாகக்கொண்ட குடிமக்கள் இயக்கமொன்றைத் துவக்கினார். இது நியாயமான, ஒளிவுமறைவற்ற, பொறுப்புள்ள அரசாண்மைக்காக பாடுபடுகிறது. பிப்ரவரி,2006ஆம் ஆண்டில் முழுவதுமாக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் பணிகளில் இறங்கினார்.

தகவல்பெறும் உரிமைச்சட்டம்
அருணா ராய் போன்றவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான சமூக இயக்கத்தை நடத்தினார். 2001ஆம் ஆண்டில் டெல்லியில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் நிறைவேறியது. நாட்டளவில் 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அதன்பிறகும் சட்டத்தை ஏட்டளவில் நிற்கவிடாது மக்களறியும் வண்ணம் இந்தியா முழுவதும் பயணித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் தனது அமைப்பின் மூலம் இச்சட்டத்தின் மூலம் சிறப்பான தகவல்களைப் பெற்று அரசாண்மையில் மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கத்தொடங்கினார்.

சிறந்த இந்தியர்
பிப்ரவரி6, 2007இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி 2006ஆம் ஆண்டுக்கான "ஆண்டின் சிறந்த இந்தியர்" பட்டத்தை பொதுமக்கள் சேவைக்காக அரவிந்துக்கு வழங்கியது.

ரமன் மகசேசே மனிதர்...
அரசுத்துறையில் ஒளிவு மறைவு இன்றி இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரான அரவிந்த் கெஜ்ரிவால் , இந்தியாவின் தகவல் பெறும் சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராக போராடும் வகையில் அரசை பொறுபேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்குக் கொடுக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சி பிறந்தது...
கடந்த நவம்பரில், அர்விந்த் கேஜ்ரிவால், தான் புதிதாய் தொடங்கிய கட்சிக்கு 'ஆம் ஆத்மி' என பெயர் சூட்டியுள்ளார். தனது கட்சியின் 300 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முன்னிலையில் இப்பெயரை அறிவித்தார்.

உண்ணாவிரத அறிவிப்பு
டில்லியில், முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான, காங்., அரசு, மின் கட்டணம், தண்ணீர் கட்டணத்தை உயர்த்தியது. கட்டண உயர்வு, அதிகமாக இருப்பதாகவும், இதை, வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஏழை மக்கள் கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

எத்தனை தடவைதான் இறப்பான்?
அவர் முன்பே பலமுறை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தனது விருப்பத்தை அறிவித்துள்ளார். ஒரு மனிதன் எத்தனை தடவைதான் இறப்பான்? அவர் பரூக்காபாத் சென்று வந்தபிறகு, டெல்லியில் சொகுசாக வாழ்ந்து வருகிறார். அவரது அறிவிப்பை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ.

அன்னாஹசாரே மறுப்பு...
நான் எந்த அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்றும் தேர்தலில் போட்டியி டமாட்டேன் என்றும் ஏற்கனவே சொல்லி உள்ளேன். அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரத போராட் டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன்'' என்றார் அன்னாஹசாரே .

ஆரம்பித்தது போராட்டம்...
மார்ச் 23, காலை டில்லியில் அறிவித்தபடியே, உண்ணாவிரத போராட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிகரமாக துவக்கினார். மின்சார கட்டணம் மற்றும் குடிநீர் பிரச்னைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதரவு வேட்டை...
அரவிந்த் கெஜ்ரிவாலின் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு அவரது ஏழை மக்கள் கட்சியினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். டெல்லியில் உள்ள 264 வார்டுகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களை கட்சியினர் சந்தித்து, 'உயர்த்தப்பட்ட மின் கட்டணம், வீட்டு வரி ஆகியவற்றை செலுத்த வேண்டாம்' என பிரசார இயக்கம் நடத்துகின்றனர்.

தொடரும் போராட்டம்...
டெல்லி மாநில அரசுக்கு எதிராக, அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டுள்ள கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம், மக்கள் ஆதரவுடன் தொடர்கிறது. சிறுவர் சிறுமியர்கள் கூட கெஜ்ரிவால் போராட்டம் நடத்தும் இடத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications