டெல்லியில் 2 துப்பாக்கி சூடுகள்: பணக்கார பிஎஸ்பி தலைவர் கொலை; ரயில் நிலையத்தில் பெண் கொலை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெரும் பணக்காரரான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மனைவியை கணவரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தீபக் பரத்வாஜ் (61) டெல்லியில் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவர் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது இவர் தனக்கு ரூ. 603 கோடி சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று காலை தெற்கு டெல்லியில் ரஜோக்ரி பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது பண்ணை வீட்டுக்குள் போலி நம்பர் பிளேட்டுடன் கூடிய ஒரு காரில் காலை 9 மணிக்கு வந்த 3 பேர், பரத்வாஜுடன் ஏதோ விஷயமாக பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, பரத்வாஜை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிவிட்டனர்.
போலீஸ் விசாரணையின்போது தான் அந்த கார் எண் போலியானது என்று தெரியவந்தது. இந்தத் தாக்குதலில் இவரது உதவியாளரும் படுகாயமடைந்தார்.
ரியல் எஸ்டேட், ஹோட்டல்கள், கல்வி நிலையங்கள் என இவரது சாம்ராஜ்யம் விரிந்து பரந்தாதகும்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர்:
இந் நிலையில் கிழக்கு டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் 25 வயதான பெண்ணை அவரது கணவர் சுட்டுக் கொன்றார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்தப் பெண்ணின் தந்தையும் படுகாயமடைந்தார்.
கர்கர்டூமா மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று பகல் 12.10 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
தீப்தி (25) மற்றும் அவரது தந்தை பிஷம் தாஸ் ஆகியோர் ரயில் நிலையத்துக்குள் நுழைந்தவுடன் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த தீப்தியின் கணவர் பவன், அவர்களை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.
இதில் தீப்தி அந்த இடத்திலேயே பலியானார். தாஸ் படுகாயத்துடன் சரிந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டால் ரயில் நிலையத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டது. பயணிகள் சிதறி ஓடினர்.
துப்பாக்கியால் சுட்ட பவன் தப்பியோடிவிட்டார்.












Click it and Unblock the Notifications