சாலை ஓர கோவில் குருக்களுக்கு அடித்த திடீர் லக்… முதல்வர் ஜெயலலிதா ரூ.1000 தட்சணை
சென்னை: சிலருக்கு சில நேரங்களில் எதிர்பாராமல் அதிர்ஷ்டம் அடிக்கும். அப்போது பணமோ, புகழோ கொட்டும். அது போன்ற எதிர்பாராத சம்பவம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சாலையோர குருக்களுக்கு கிடைத்தது. முதல்வர் ஜெயலலிதாவின் கையால் 1000 ரூபாய் தட்சணை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் அந்த கோவில் பூசாரி.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனியை சேர்ந்தவர் பால சூர்யா, 34. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 10க்கும் அதிகமான, விநாயகர் கோவில்களுக்கு பூஜை செய்து வருகிறார். மேலும், சாலைகளில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்வதும், இவரது வழக்கம். வழக்கம் போல், நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில், அக்கரை சிக்னல் அருகில் உள்ள, சாலையோர விநாயகர் கோவிலில், பூஜை செய்து கொண்டிருந்தார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய பண்ணை வீட்டில் இருந்து சட்டமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார். முதல்வரின் கார், கோவிலை கடந்து சென்றது. சிறிது நேரத்தில் பின்னால் வந்து, கோவில் அருகே நின்றது.
அப்போது என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவை பாதுகாப்பு அதிகாரிகள், அழைத்தனர்.
குருக்கள் சூர்யா, படபடப்பு கலந்த பயத்துடன், முதல்வர் அருகில் சென்றார். காரில் இருந்து இறங்கிய முதல்வர், அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர், பூஜை செய்த பிரசாதம் வாங்கி கொண்டு, 1,000 ரூபாய் தட்சணை அளித்தார்.
கோவில் குருக்கள் சூர்யா, தன்கண்ணை நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். எதிர்பாராமல் முதல்வரின் கையால் பெற்ற ஆயிரம் ரூபாயை பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கிறார் சூர்யா.












Click it and Unblock the Notifications