மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பிரான்ஸ் படைகள் சுட்டு 2 இந்தியர்கள் பலி!

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மத்தியில் உள்ள நாடு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு. இந்த நாட்டில் ஆயுதம் ஏந்திய போராளிகள் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை ஒடுக்க பிரான்ஸ் படைகள் அங்கு நிலை கொண்டுள்ளன.
ஆனால், பிரான்ஸ் படைகளையும் மீறி தலைநகர் பாங்குய்யை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் போராளிகள் கொண்டு வந்துவிட்டனர். இதையடுத்து அதிபர் ஃபிரான்கோய்ஸ் போஸிஸ் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளையும் தலைநகரின் பல பகுதிகளையும் இந்தப் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்ட நிலையில், அந்த நாட்டின் தலைநகர் பாங்குய்யில் உள்ள விமான நிலையத்தை பிரான்ஸ் படைகள் கட்டுப்படுத்தி வருகின்றன.
இந் நிலையில் பிரான்ஸ் படைகள் மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நிலையில், விமான நிலையம் நோக்கி அதிவேகத்தில் வந்த 3 வாகனங்கள் மீது பிரான்ஸ் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில் அந்த வாகனங்களில் இருந்த 2 இந்தியர்கள் பலியாகிவிட்டனர்.
உள்நாட்டுப் போர் தீவிரமாகிவிட்டதால் அங்கிருந்து தப்ப இந்தியர்கள் மற்றும் சாட் நாட்டவர்கள் இந்த வாகனங்களில் வந்துள்ளனர். ஆனால், தங்களது எச்சரிக்கையையும் மீறி அவர்களது அதிவேகத்தில் தங்களை நோக்கி வாகனங்கள் வரவே, போராளிகள் என நினைத்து தாங்கள் சுட்டதாக பிரான்ஸ் படைகள் கூறியுள்ளன.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த பிற இந்தியர்கள், சாட் நாட்டவர்களுக்கு பிரான்ஸ் படைகள் முதலுதவி அளித்துள்ளன.
மேலும் இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலியானதற்கு பிரான்ஸ் அரசு, இந்திய அரசிடம் வருத்தமும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நண்பன் என்ற முறையில் இந்த சம்பவத்துக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக பிரான்ஸ் கூறியுள்ளது.
மேலும் பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்ட், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வருத்தம் தெரிவித்து தனிப்பட்ட செய்தியும் அனுப்பியுள்ளார். அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜீன் லி ட்ரியன் இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனியுடன் தொலைபேசியில் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணைக்கும் பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications