சோனியா-பிரதமர் என்ற 'இரு அதிகார மைய' பார்முலா தப்பு: சொல்லும் ராகுல் காந்தியின் 'மனசாட்சி'!

சோனியா செய்ததைப் போல பிரதமராக ஒருவரை நியமிக்காமல், அந்தப் பதவிக்கு ராகுல் காந்தியே நேரடியாக வர வேண்டும் என்றும் திக்விஜய் கூறியுள்ளார்.
இவர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், என்னைப் பொறுத்தவரை சோனியா, பிரதமர் என்று இரு அதிகார மையங்களைக் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இயங்கியது தவறு. இது தவறான முறை. பிரதமராக இருக்கும் ஒருவருக்கு செயல்பட முழு அதிகாரமும் இருக்க வேண்டும்.
சோனியா செய்ததைப் போல பிரதமராக ஒருவரை நியமிக்காமல், அந்தப் பதவிக்கு ராகுல் காந்தியே நேரடியாக வர வேண்டும் என்பதே எனது கருத்து. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது பிரதமராக இருப்பவர் தான் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும்.
நான் பிரதமராக விரும்பவில்லை என்று ராகுல் காந்தி எப்போதுமே சொன்னதில்லை. அவர் சொன்னதை மீடியாக்கள் தவறாகப் புரிந்து கொண்டன என்பதே உண்மை. இதை ராகுலே என்னிடம் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை வந்தால் ராகுல் சரியான முடிவை (பிரதமராகும் முடிவு) எடுக்க வேண்டும். அவரால் கூட்டணிக் கட்சிகளை புரிந்து கொண்டு நடக்க முடியும். அந்த அளவுக்கு அவருக்கு 'மெச்சூரிட்டி' உள்ளது. அவருக்கு உதவ மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றார் திக்விஜய் சிங்.
இவர் வழக்கமாகவே ராகுல் காந்தியின் மன ஓட்டத்தை எதிரொலிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதிக்கு முரசொலி மாறன் மாதிரி ராகுல் காந்தியின் மனசாட்சியாகப் பார்க்கப்படுபவர் திக்விஜய்.
இவரது பேச்சின் மூலம், வரும் 2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்றால் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் ராகுல் காந்தி ஆசைப்படுவது தெளிவாகிறது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வேஸ்ட் என்பதையும் திக்விஜய் மூலம் ராகுல் சுட்டிக் காட்டுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications