நடிகை சுகுமாரி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
பழம்பெரும் திரைப்பட நடிகையும், மறைந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் மனைவியுமான சுகுமாரி உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26.3.2013) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
சுகுமாரி, சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். தன்னுடைய 10வது வயதிலேயே திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர் பாசமலர், பட்டிகாடா பட்டணமா உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவர்.
திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ள சுகுமாரி, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications