கண்துடைப்பு நாடகங்கள் தான் நடந்தனவே தவிர.......
கண்துடைப்பு நாடகங்கள் தான் நடந்தனவே தவிர.......
இதனையடுத்து, டெல்லி வந்த இலங்கை அதிபர் பிரதமரை சந்தித்த பிறகு "போர் நிறுத்தம் கிடையாது" என்று அறிவித்தார். பின்னர், "இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசைப் போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்ற அளவில் 12.11.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘அனைத்துக் கட்சிக் கூட்டம்', ‘சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்', ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', ‘மனிதச் சங்கிலி போராட்டம்', ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை கருணாநிதியே பெற்றுக் கொள்ளுதல்', ‘எல்லோரும் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்' என்ற அறிவிப்பு, ‘டெல்லியில் பிரதமருடன் சந்திப்பு', ‘வேலை நிறுத்தம்', ‘பேரணி' என பல்வேறு கண்துடைப்பு நாடகங்கள் தான் நடந்தனவே தவிர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இவையெல்லாம் நடந்த வரலாற்று உண்மைகள். வரலாற்றை மறுக்க முடியாது, மறைக்க முடியாது. ‘இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்கிறேன்' என்று சொல்லி போரை தீவிரப்படுத்தியதுதான் மிச்சம்.
கடைசியாக நடைபெற்ற கருணாநிதியின் மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தின் மூலம் லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். ஆனால், இந்த மூன்று மணி நேர உண்ணாவிரதத்தைப் பற்றி புது விளக்கங்களை சமீப காலமாகக் கூறி வருகிறார் கருணாநிதி.
இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு தெரிவித்ததாகவும், அதனை மத்திய அரசு நம்பி தனக்கு தெரியப்படுத்தியதாகவும், அதனைத் தான் நம்பி இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று அறிவித்ததாகவும், இலங்கை அரசு அவ்வாறு ஏமாற்றிவிட்டதாகவும் சமீப காலமாக கருணாநிதி கூறி வருகிறார். இதனை எந்தத் தமிழரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
"போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கூறி...
"போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கூறி தனது உண்ணாவிரத நாடகத்தை மூன்று மணி நேரத்தில் முடித்துக் கொண்டதற்கு அடுத்த நாள், "கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வந்திருக்கிறதே" என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப்போலத்தான்..." என்று பதில் அளித்தார் கருணாநிதி. அதாவது போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பதை நன்கு உணர்ந்துதான் இது போன்ற பேட்டியை அளித்துள்ளார் கருணாநிதி.
இலங்கையில் உச்சக்கட்டப் போர் முடிவுக்கு வந்த பிறகு, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இலங்கை அரசால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர், இதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தினேன்.
ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதியோ, தன் மகள் கனிமொழி உட்பட திமுக மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை அதிபரைச் சந்திக்க வைத்து, கை குலுக்கி, விருந்துண்டு, பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். பரிசு பொருட்களைப் பெற்று வந்த அவர்களை திமுக தலைவர் கருணாநிதி விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார்.
திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல்...
பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, "முகாம்களில் தமிழர்கள் யாரும் சித்திரவதை செய்யப்படவில்லை" என்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, தானும், தன் குடும்பத்தினரும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு உறுதுணையாக, ஆதரவாக இருந்து, அவர்கள் அழிவதற்கு மறைமுகக் காரணமாக விளங்கிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின், டெசோ அமைப்பை மீண்டும் புதுப்பித்துள்ளார். திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல் இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அதிக அக்கறை செலுத்துவது போல் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
மத்திய அமைச்சரவையிலிருந்து வெளி வந்ததை இலங்கை தமிழர்களுக்காகதான் செய்த மிகப்பெரிய தியாகம் என்று சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கருணாநிதி. மத்திய அரசுக்கும் தி.மு.கவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று காட்டிக் கொள்ளும் கருணாநிதி, ரயில்வே குழுத் தலைவர் பதவியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு இன்று வரை தொடருவது குறித்து வாய் திறக்கவில்லையே!.
மத்திய அமைச்சராக இருந்த அவரது மகன் அழகிரி காங்கிரஸ் தலைவரையும், பிரதமரையும், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தித்து இருக்கிறார். ராஜினாமா செய்த பின் உங்கள் மன நிலை என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அலுவலகத்திற்கு போக முடியவில்லை, மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை" என்று கூறி இருக்கிறார் அழகிரி.
இலங்கைத் தமிழர்கள் அழியக் காரணமாக இருந்த மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்தததையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி விலைவாசி உயர்விற்கு வித்திட்டதற்கு உறுதுணையாக இருந்ததையும் "மக்கள் சேவை" என்று குறிப்பிடுகிறார் போலும்! இதுகுறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கவில்லையே!.












Click it and Unblock the Notifications