நாளைக்குள் குருவாயூர், அனந்தபுரி, குமரி எக்ஸ்பிரஸ் பெட்டிகளை எரிப்போம், அல்லது கழற்றுவோம்: மிரட்டல்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேலாளர் உமா சங்கருக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
ஞாயிற்றுக்கிழமை (24ம் தேதி) முதல் வெள்ளிக்கிழமைக்குள் (புனித வெள்ளி) குருவாயூர், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, பெட்டிகளை தனித்தனியாக கழற்றி விடுவோம், அல்லது தீயிட்டு எரிப்போம். முடிந்தால் தடுத்துப்பார்.
நாங்கள் வியாபாரியாகவோ, திருநங்கையாகவோ, பொதுமக்களாகவோ, போலீசாகவோ வருவோம். ரயில்கள் காட்டுப்பாதைக்குள் வரும் போது எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவோம். சென்னை வருவதற்குள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். தமிழ் வாழ்க, தமிழ் வீரப்படை என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த கடிதத்தை எழுதியவர் பெயர் செந்தமிழ் அழகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை படித்த உமா சங்கர் எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் இது குறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே போலீஸ் எஸ்.பி.கயல்விழி கூறுகையில்,
எழும்பூரில் இருந்து புறப்படும் அனைத்து தென்மாவட்ட ரயில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் ஒரு எஸ்.ஐ., 2 ஆயுதம் ஏந்திய போலீஸ் மற்றும் 2 போலீசார் பயணம் செய்கின்றனர். மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ரயில்வே பாதுகாப்புபடை போலீசாரும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications