திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரசாரை கைது செய்ய வைகோ, பழ.நெடுமாறன் கோரிக்கை

காங்கிரசாரால் தாக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் சத்யகுமரன், முகமது ஜப்ரி, கஜேந்திரபாபு, பொறியியல் கல்லூரி மாணவர் வெங்கடேசன் ஆகியோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை சந்தித்து பேசிய வைகோ, ஆத்திரப்படக்கூடாது, பொறுமையாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
திருச்சியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.
கொலை பாதகன் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாணவர்கள் 12 நாட்களாக உண்ணாவிரதம் உள்பட அற வழியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காங்கிரசார் திட்டமிட்டு குண்டாந்தடியுடன் வந்து தாக்கி இருக்கிறார்கள்.
எனவே காங்கிரசார் மற்றும் தூண்டியவர்கள் உள்பட அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்யவேண்டும். இதுதான் லட்சோப லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
பழ.நெடுமாறன் ஆறுதல்
இதேபோல் காங்கிரஸ் தொண்டர்களின் தாக்குதலுக்கு ஆளாகி காயமடைந்த மாணவர்களை பழநெடுமாறன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.மேலும் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தப் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.











Click it and Unblock the Notifications