’விஷ லட்டு சாப்டா சிவனைப் பார்க்கலாம்’- விநோத நம்பிக்கையில் 5 பேர் உயிரிழந்த பரிதாபம்
ஜெய்ப்பூர்: கடவுள் நம்பிக்கை அதீதமாகி, சொர்க்கத்திற்குப் போய் சிவனை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் 5 பேர் விஷ லட்டு தின்று பரிதாபமகா உயிரிழந்துள்ளனர்.
பக்தி சில நேரங்களில் பக்தர்களின் கண்களையும், மூளையையும் மறைத்து விடுவது உண்டு. அப்படிப்பட்ட சம்பவம் தான் தற்போது ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் நகரில் உள்ள நசியா காலனியைச் சேர்ந்தவர் கன்சன்சிங் (45). இவர் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இவரைப் போலவே இவரது மனைவி நீலம் (40) தாய் பகவதி தேவி, மகள் டிரிமீ (16), மகன் பிரதுமன் (11), சகோதரர் தீப்சிங், அவரது மகன் லவ்சிங் (10), உறவினர் ரஷ்மி (21) ஆகியோரும் சிவன் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் சிவபெருமானை நேரில் பார்க்க வேண்டும் என்று பல்வேறு பூஜைகள் செய்து வந்துள்ளனர். ஊசியால் ரத்தத்தை எடுத்து லிங்கத்தை 3100 தடவை அபிஷேகம் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சிவபெருமான் நேரடி காட்சி அளிக்கவேயில்லை.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கன்சன்சிங் சொர்க்கத்தில் சிவனை பார்க்கப் போவதாக கூறி விஷம் தடவிய லட்டை சாப்பிட்டார். இதையடுத்து சிவனை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் வீட்டில் உள்ள அனைவரும் விஷ லட்டுக்களை சாப்பிட்டுள்ளனர். கன்சன்சிங், நீலம், டிரிமீ, பிரதுமன், லவ்சிங் ஆகிய 5 பேரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.
உயிருக்குப் போராடிய பகவதிதேவி, ரஷ்மி இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பினார்கள். கன்சன்சிங்கின் தம்பி தீப்சிங் சிவ வழிபாடுகளில் ஈடுபாடு இல்லாதவர். சம்பவம் நடந்தபோது அவர் டெல்லி சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கன்சன்சிங் வீட்டில் இருந்து வீடியோ காமிரா கைப்பற்றப்பட்டது. அதன் மூலம்தான் கன்சன்சிங் குடும்பத்தினர் சிவனை சொர்க்கத்தில் பார்க்க விஷ லட்டு தின்ற விஷயம் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications