மோடி, அமீத் ஷாவுக்குப் பதவி: தன்னைத் தானே அழிக்க ஆரம்பித்துள்ளது பாஜக- காங்.
டெல்லி: நரேந்திரமோடி, அமீத் ஷா ஆகியோருக்குப் பதவி கொடுத்துள்ளதன் மூலம் பாஜக தற்கொலையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. தன்னைத் தானே அது அழிக்க ஆரம்பித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சி மன்றக் குழுவில் நரேந்திர மோடிக்குப் பதவி தரப்பட்டுள்ளது. அதேபோல அவரது தீவிர ஆதரவாளரும், சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடயைவருமான அமீத் ஷாவுக்கு பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, சலசலப்பை கிளப்பியுள்ளது. மோடி, ஷா நியமனம் குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தற்கொலை முடிவு- கபில் சிபல்
மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் மிகக் கடுமையான வழக்கை எதிர்கொண்டிருப்பவர். பாஜக தன்னைத் தானே அழிக்க முடிவு செய்து நடவடிக்கையிலும் இறங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது சண்டை மோடிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடங்கியுள்ளது என்றார் சிபல்.
வருணை நினைத்து சந்தோஷப்படும் மேனகா
பாஜகவின் புதிய பொதுச் செயலாளராக தனது மகன் வருண் காந்தி நியமிக்கப்பட்டிருப்பது குறித்து தாயார் மேனகா காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தனது பொறுப்பை மிகவும் ரசித்து செயல்படுத்துவார் வருண் என்று கருதுகிறேன் என்றார்.
ஏன் இத்தனை சத்தம்... சுஷில் குமார் மோடி
பாஜகவின் சுஷில் குமார் மோடி கூறுகையில், இது ஒரு சாதாரண நியமனம்தான். இதை ஏன் பரபரப்பாக பேசுகிறார்கள். அனைவருக்கும் கனவு காண உரிமை உண்டு. மோடிக்கும் அந்த உரிமை உண்டு என்றார்.
ஐக்கிய ஜனதாதளம் சொல்வது என்ன?
ஐக்கிய ஜனதாதள தலைவர் நீரஜ் குமார் நரேந்திர மோடி குறித்துக் கூறுகையில், பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுபவர் மதச்சாயமற்றவராக இருக்க வேண்டும். பின்தங்கியுள்ள மாநிலங்களை முன்னேற்றுபவராக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய இன்னும் காலம் உள்ளது என்றார்.
மக்களுக்கு விடப்பட்டுள்ள சவால் ... ஷா மீது வழக்குப் போட்ட தீஸ்தா செடல்வாட்
அமீத் ஷாவை பாஜகவின் பொதுச் செயலாளராக நியமித்திருபப்து இந்திய மக்களுக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும். அமீத் ஷா மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எனவே மக்கள் இப்படிப்பட்ட நபருக்கு பதவி தந்தது நியாயமா என்பதை அக்கட்சிக்கு உணர்த்த வேண்டும் என்றார்.