நெல்லை அருகே காதல் விவகாரத்தால் 2 கிராமத்தினர் இடையே மோதல்: போலீசார் குவிப்பு
நெல்லை: நெல்லை அருகே காதல் விவகாரம் தொடர்பாக இரண்டு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அழகப்பபுரம். இங்கு சுமார் 150 வீடுகள் உள்ளன. இந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை பக்கத்து ஊரான திருமலாபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதன் பொருட்டு அவர் அடிக்கடி அழகப்பபுரம் தெருக்களில் சுற்றியுள்ளார்.
இதனை தட்டிக் கேட்ட அழகப்பபுரத்தைச் சேர்ந்த முதியவரை பைக்கில் வந்த இரண்டு பேர் தாக்கினர். இதனால் இரு கிராமத்தினருக்கும் இடையே கடந்த 26ம் தேதி தகராறு ஏற்பட்டது. இரண்டு ஊரைச் சேர்நதவர்களும் சாமாதனமாக பேசி பிரச்சனையை முடித்தனர். இந்த நிலையில் நேற்று காலை திருமலாபுரத்தைச் சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் கம்பு, அரிவாள், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் அழகப்பபுரத்திற்கு சென்று பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ், அவரது மனைவி லீலாவதி மற்றும் பால்கனி ஆகியோரை தாக்கினர். இதையடுத்து கிராமத்திலிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் கதவை பூட்டி கொண்டு வீட்டின் உள்ளே இருந்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் கதவுகளில் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.
மேலும் 3 வீடுகள், 4 பைக்குளும் சேதப்படுத்தப்பட்டன. ஒருவரது வீட்டிற்குள் புகுந்து பீரோ, நாற்காலி மற்றும் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகை ஆகியவற்றை அடித்து நொருக்கினர். மற்றொரு வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை அடித்துக் கொன்றனர். இது குறித்து அழக்கப்பபுரம் மக்கள் பணகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். நாங்குநேரி டிஎஸ்பி கோவிந்தராஜ், பணகுடி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வன்முறையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக திருமலாபுரம் சென்றனர். அப்போது கல் வீசப்பட்டதில் டிஎஸ்பியின் கார் கண்ணாடி உடைந்தது.
இது தொடர்பாக திருமலாபுரம் பஞ்சாயத்து தலைவர் குணசேகரன் உள்பட 28 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சுயம்புலிங்கம், சமுத்திரபாண்டி, நெல்சன், பாலகிருஷ்ணன், பாலவேசமுத்து, பாலன் உள்பட 6 பேரை கைது செய்தனர். எஞ்சியவர்களை தேடி வருகின்றனர். பதற்றம் நிலவுவதால் 2 கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications