மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பின் தனியார் நாளிதழ்கள் இன்று வெளியாகின!!

1964-ம் ஆண்டு நீவின் என்பவரது சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்களின் வர்த்தகம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதில் பத்திரிகைகளும் அடக்கம். அரசாங்கமே நாளிதழ்களை நடத்தி வந்தது. நூற்றுக்கணக்கான வார இதழ்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு, சுகாதாரம் போன்றவற்றை மையமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக மியான்மரில் ஜனநாயக நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏஎஃபி செய்தி நிறுவனம் தமது கிளையை யாங்கூனில் அமைத்தது. இதன் பின்னர் இன்று ஏப்ரல் 1-ந் தேதி முதல் தனியார் நாளிதழ்கள் வெளியிட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று நாளிதழ்கள் வெளியாகியிருக்கின்றன. 1960களுக்குப் பின் பிறந்தவர்களுக்கு தனியார் நாளிதழ்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தால் அவை விறுவிறுவென விற்றுத் தீர்ந்திருக்கின்றன.
அந்நாட்டின் ஆளும் கட்சி சார்பில் தி யூனியன், பிரபல தி வாய்ஸ் வார இதழின் சார்பில் வாய்ஸ் டெய்லி, தி ஸ்டாண்டர்ட் டைம் டெய்லி, கோல்டன் ஃப்ரெஸ் லேண்ட் ஆகிய 4 நாளிதழ்கள் இன்று வெளியாகி இருக்கின்றன.
கோல்டன் ஃப்ரெஸ் லேண்ட் நாளிதழ் 80 ஆயிரம் பிரதிகளை அச்சிட்டதாகவும் அவை அனைத்துமே விற்றுத் தீர்ந்ததால் ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன் என்று அதன் தலைமை செய்திஆசிரியரான 81 வயது கின் மெளங் லாய் கருத்து தெரிவித்திருக்கிறார்.இவர்தான் பர்மிய மொழி மூத்த பத்திரிகையாளராக கருதப்படுகிறவர்.1964-ம் ஆண்டு மோக்யோ என்ற பர்மிய நாளிதழில் பணியாற்றியிருந்தார். இந்த அரை நூற்றாண்டுகாலமாக இந்த ஒரு தருணத்துக்காகவே தாம் காத்திருந்தேன் என்றார் அவர். மேலும் பல நிறுவனங்களும் நாளிதழ்களை வெளியிட முன்வந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications