சத்துணவு திட்டம்... சட்டசபையில் அமைச்சர்கள்- திமுக மோதல்
சென்னை: சத்துணவு திட்டத்தை குறை கூறி விமர்சித்தவர் கருணாநிதி என்று கூறிய அமைச்சர் வளர்மதி ஒரு வார்த்தையை கூறியுள்ளார். அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு சட்டசபையில் திமுகவினர் வாக்குவாதம் செய்தனர்.
இன்றைய சட்டசபை கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் பேசினார். அப்போது அவர், சத்துணவில் வாரம் 5 முட்டை, வாழைப் பழம், கொண்டகடலை வழங்கியவர் திமுக தலைவர் கருணாநிதி தான் என்று கூறி அவர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டார்.
அப்போது அமைச்சர் வளர்மதி குறுக்கிட்டு, சத்துணவு திட்டத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அறிமுகப்படுத்தியபோது இந்த திட்டத்தை திமுக எதிர்த்தது. சிறுவர்களை தட்டு ஏந்த வைக்கும் இந்த திட்டம் தேவையற்றது என்று கூறினார்கள் என்றார்.
அதற்கு திமுக தரப்பில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தனர்.
அமைச்சரின் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை என்றும் மாறாக திமுக ஆட்சிக்கு வந்ததும் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கி சத்துணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம் என்றார்.
அப்போது பேசிய சபாநாயகர் தனபால், அமைச்சர் கூறிய கருத்தும் அதற்கு திமுக தரப்பில் அளிக்கப்பட்ட பதிலும் அவைக்குறிப்பில் இருக்கும். எதையும் நீக்கத் தேவையில்லை என்றார்.
திமுக தரப்பில் சத்துணவு திட்டத்தை எதிர்த்தது உண்மைதான். அதற்கு ஆதாரம் இருக்கிறது என்று அமைச்சர் வைத்திலிங்கம் கூறியதுடன் இதை மறுப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தயாரா என்று சவால் விடுத்தார். இதையடுத்து மீண்டும் திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்து அமைச்சர்களின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, சத்துணவு திட்டத்தை மிகவும் கேவலமாக கருணாநிதி விமர்சித்தார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி அம்மா ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை யார் ஆட்சிக்கு வந்தபோதிலும் தடுக்க முடியாது. இந்த திட்டத்தை விமர்சித்த கருணாநிதி அரசியல் ஆதாயத்திற்காகத் தான் முட்டை வழங்கினாரே தவிர வேறு எண்ணம் இல்லை.
திமுக அறிவித்த பிச்சைக்காரர்கள் நல்வாழ்வுத் திட்டம், கண் ஒளி வழங்கும் போன்ற திட்டங்கள் நிலையான திட்டமாக இல்லாமல் மறைந்து போய் விட்டன. ஆனால் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வரும் நல்ல திட்டங்கள் எல்லாம் யாராலும் எடுக்க முடியாத நிரந்தர திட்டங்களாக இருப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றார்.
இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், நாங்கள் ஆதாயத்திற்காக முட்டை வழங்கியது போன்று அமைச்சர் பேசுகிறார். நாங்கள் முட்டை வழங்க மாவட்ட அளவில் ஏலம் விட்டோம். ஆனால் இப்போது மாநில அளவில் ஏலம் விட்டு முட்டை வழங்குகிறார்களே எப்படி என்றார்.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து திமுக உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன் தொடர்ந்து பேசினார்.












Click it and Unblock the Notifications