500க்கும் அதிகமான படகுகளில் கடல் வழியாக கூடங்குளம் முற்றுகை.. போலீஸ் குவிப்பு… பதற்றம்

செட்டிக்குளத்தில் உள்ள கூடங்குள அணு மின் நிலைய ஊழியர்கள் வீடுகளை கடல் வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 500 க்கும் அதிகமான படகுகளில் கருப்பு கொடியை ஏந்தி தங்கள் எதிர்ப்பை கூறியபடி அணுமின் வளாக குடியிருப்பை கடல் வழியாக சென்று முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
நேற்று கூட்டபுளி கிராமத்தில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், கடைசி நேரத்தில் தங்கள் போராட்டத்தை கடல்வழியாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. கூடங்குள அணுமின்நிலைய ஊழியர்களுக்கு எங்களது வேதனையையும் பிரச்சனையை எடுத்துரைப்பதற்காகவே கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் வீடுகளை முற்றுகையிடுகிறோம்.
கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் தங்களுக்கு எதிரிகள் அல்ல என்றும், தங்களது எதிரி மத்திய அரசின் தவறான கொள்கை தான் என்றும் கூறினார்.
மத்திய அரசு தமிழக மக்களை சோதனை எலிகளாக பார்க்கின்றனர். அறவழியில் போராட்டத்தை மேற்கொள்ளும் தங்களுக்கு காவல்துறையினரும், தமிழக அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் தங்களது அடுத்தக்கட்ட போராட்டம் இதை விட தீவிரமாக இருக்கும் என்றும் அந்த போராட்டம் மத்திய அரசை கவிழ்க்கும் அளவில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு மின் நிலையம் ரஷ்ய அதிபர் புடின் அனுப்பி வைத்த பிணம். அந்தப் பிணத்தை வைத்து இங்கே போஸ்ட் மார்டம் நடைபெறுகிறது. தமிழர்களைத் தொடர்ந்து பரிசோதனை எலிகளாக பயன்படுத்த மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம் என்றார்.
பாதுகாப்பு பலம்:
அணு உலை எதிர்ப்பாளர்களின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அதிரடிப்படை, மத்திய தொழிற்படை, தமிழக அதிரப்படை என 2000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை முதல் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள நண்பர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற இயலவில்லை. தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications