அழகிரியை சமயம் பார்த்து நெருக்கும் ஸ்டாலின்.. 15 ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ்!

திமுகவில் ஸ்டாலினின் கை நாளுக்கு நாள் ஓங்கி வருகிறது. அழகிரி ஒடுக்கப்பட்டு வருகிறார். அவரைச் சுற்றியிருந்த பலரும் ஸ்டாலின் அணிக்கு மாறிவிட்டனர். இப்போது 2 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே அழகிரிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களும் விரைவில் அணி மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாறு கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டுள்ள அழகிரிக்கு மேலும் சோதனைகளை கட்சித் தலைமை தர ஆரம்பித்துள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் துணை பொதுச் செயலாளரான துரைமுருகன் பேசினார். ஆனால், இந்தக் கூட்டத்தை அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.
இந் நிலையில் "கட்சி தலைமை முறையாக அறிவித்தும், இந்தக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை' என்று விளக்கம் கேட்டு மதுரை அவைத் தலைவர் இசக்கிமுத்து, நகர் துணை செயலர்கள் உதயகுமார், சிவக்குமார், சின்னம்மாள் உள்ளிட்ட 15 பேருக்கு, திமுக அமைப்பு செயலாளர் இளங்கோவன் கையெழுத்திட்ட கடிதம் நேற்று கூரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு முன், நகர் திமுக சார்பில் ஒட்டிய போஸ்டர்களில் உங்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
மேலும், கூட்டம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நகர் நிர்வாகிகளால் உங்களது மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு அழைப்பும் விடுக்கப்பட்டது. இருந்தும், கூட்டத்தை புறக்கணித்துள்ளீர்கள். இது, கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல். கடிதம் பெற்ற ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இன்று தனது ஆதரவாளர்களுடன் அழகிரி விவாதிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
அழகிரி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது இது இரண்டாவது முறையாகும். இளைஞர் அணி நேர்காணல் நடத்த ஸ்டாலின் மதுரை வந்தபோது கூட்டத்தை புறக்கணித்த, 17 பேருக்கு, ஏற்கனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதில் அவைத் தலைவர் இசக்கிமுத்து கட்சியில் இருந்தே நீக்கப்பட்டதும், பின்னர் அழகிரியின் அனத்தலால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதும், மற்றவர்களின் விளக்கத்தை கட்சி ஏற்றுக் கொள்வதாக அறிவித்ததும் நடந்தது.
ஆனால், இந்த முறை இவர்களது விளக்கம் சரியாக இல்லாவிட்டால் கட்சியை விட்டு நீக்கப்படுவது நிச்சயம் என்று தெரிகிறது.
எந்த அதிகாரமும் இல்லாமல், கிரானைட் விவகாரம், உர விவகாரம் என மாட்டிக் கொண்டு முழித்து வரும் அழகிரியை இந்த நேரத்தில் ஒடுக்காவிட்டால் பின்னால் கஷ்டம் என ஸ்டாலின் நினைப்பதாகத் தெரிகிறது. இதனால், போட்டுத் தாக்கி வருகிறார்.
இந்த 15 பேரையும் கட்சியை விட்டு நீக்கினால் மற்ற அழகிரி அடிப்பொடிகளும் அணி விட்டு அணி தாவி தன் பக்கம் வந்துவிடுவர் என ஸ்டாலின் நினைப்பதாகத் தெரிகிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதியின் முழு ஆதரவும் இருப்பதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications