எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.. அத்வானியின் 'உல்டா' பேச்சு

ஆனால், காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று வித்தியாசமாகப் பேசியுள்ளார் பாஜக தலைவர் அத்வானி. இதன்மூலம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுமே மத்தியில் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்பதையும், மூன்றாவது ஒரு அணி தான் ஆட்சிக்கு வரப் போகிறது, அதற்கு காங்கிரசோ அல்லது பாஜகவோ ஆதரவு தர வேண்டிய நிலை வரப் போகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் நகரில் மாநில பாஜக செயற்குழுவில் பங்கேற்க வந்த அத்வான நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு கர்நாடகம், டெல்லி, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் நேரடி போட்டி. இந்த தேர்தல்களில் பாஜக வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது.
இந்தத் தேர்தல்கள் முடிந்தவுடன், இந்த ஆண்டே நாடாளுமன்றத் தேர்தல் வரும். நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் காங்கிரஸ் தோற்பது உறுதி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
கடந்த 3 ஆண்டுகளில் ஊழல்தான் முக்கிய பிரச்சனை ஆகிவிட்டது. எத்தனையோ ஊழல்கள் வெளிவந்து விட்டன. இந்த ஊழல்களால், சாதாரண மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த அரசில் இருந்து விடுபட விரும்புகின்றனர். விலைவாசி உயர்வும் முதுகெலும்பை முறித்து விட்டதால், மக்கள் மாற்றம் காண விரும்புகின்றனர். கறுப்பு பணத்தை மீட்கக்கோரி நான் யாத்திரை சென்றேன். ஆனால் ஒரு ரூபாய் கூட மீட்கப்படவில்லை.
ஆனால், வாஜ்பாய் அரசு எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியது. இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றியது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை கொண்டு வந்தது. விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தது. ஊழலே இல்லாத நிலை இருந்தது என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications